search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natanyahu"

    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாட்டு போலீஸ் இன்று பரிந்துரைத்துள்ளது. #Israelpolice #BenjaminNetanyahu Netanyahubribery
    ஜெருசலேம்:

    யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். 

    தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என போலீசார் விசாரித்து வந்தனர். தன்மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.

    விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர். 

    ‘வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

    வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இதுவரை பலமுறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில், சுமார் 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர்வதற்கு போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாடு போலீஸ் தலைமையகம் இன்று பரிந்துரைத்துள்ளது. 

    நேதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் லஞ்சம் வாங்கி பண ஆதாயம் அடைந்ததன் மூலம் நாட்டுக்கு எதிரான மோசடி மற்றும் நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பெஞ்சமின் நேதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான தார்மிக உரிமையை இழந்து விட்டதால் அவர் உடனடியாக இன்றே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். எனினும், தற்போது பெஞ்சமின் நேதன்யாகு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Israelpolice  #BenjaminNetanyahu Netanyahubribery
    ×