search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Man tries sell his wife"

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியை டெல்லிக்கு அழைத்து வந்து விபச்சார புரோக்கர் என நினைத்து போலீசிடம் விற்க முயன்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். #ManSellWife
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் அராரியா பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் சமீரா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் அழகில் மயங்கி அவரை 2-வது மனைவியாக ஆக்கிக்கொண்டார். முதல் மனைவியைவிட இரண்டாவது மனைவி சமீராவுடன் பெரும்பாலான நாட்களை கழித்தார். முதலில் அவரை தனியாக குடிவைத்த சதாம், பின்னர் முதல் மனைவி இருக்கும் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். அதன்பின்னர் இரண்டு மனைவிகளுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதுஒருபுறமிருக்க சமீராவின் அழகு மற்ற ஆண்களை கவரத் தொடங்கியது. ஒருநாள் வேறு ஒரு நபருடன் சமீரா ‘ஷாப்பிங்’ செய்வதை சதாம் உசேன் பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற அவர் அந்த நபருடன் சண்டை போட்டார். அழகு தனக்கு ஆபத்தாக முடிந்ததை உணர்ந்தார்.

    பொறாமை அடைந்த அவர் சமீராவுடன் அடிக்கடி சண்டை போட்டார். இதனால் அவர்களது காதல் வாழ்க்கையில் புயல் வீசியது. ஒரு காலகட்டத்தில் அவரை கொலை செய்ய சதாம் உசேன் திட்டமிட்டார். அதற்காக கத்தி வாங்கினார். அன்று இரவு அவருக்கு திடீரென ஒரு புதிய எண்ணம் உதித்தது. அழகாக இருக்கும் இவளை ஏன் கொலை செய்ய வேண்டும். அழகையே பணமாக்கி கொண்டால் என்ன என்ற எண்ணம் உதித்தது.

    எனவே, டெல்லிக்கு அழைத்து சென்று இவளை விபசாரத்துக்கு விற்க முடிவு செய்தார். தனது திட்டத்தை செயல்படுத்த எண்ணிய அவர் சமீராவுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். உனது பெற்றோரை பார்க்க டெல்லி செல்வோம் என அழைத்தார்.

    ஆனால் சமீராவின் நல்ல நேரம். விபச்சார புரோக்கர் என நினைத்து சதாம் உசேன் தொடர்பு கொண்ட நபர் போலீஸ் உளவாளி. அவர் மூலம் இந்த விவகாரம் டெல்லி போலீசுக்கு தெரியவந்தது.

    சதாம் உசேன் கூறியதை உண்மை என்று நம்பிய சமீரா தனது கணவர் சதாமுசேனுடன் ஆசையாக டெல்லி வந்தார். டெல்லி ஜிபி சாலை அருகே உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள விபசார விடுதிகள் குறித்தும், புரோக்கர்கள் குறித்தும் விசாரித்துள்ளார். அவர்களில் ஒரு புரோக்கர், சதாம் உசேன் நடவடிக்கைகள் மீது சந்தேகமடைந்து, டெல்லி கம்லா மார்க்கெட் போலீஸ் நிலைய எஸ்எச்ஓ சுனில் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே, ஒன்றும் அறியாத சமீராவை சதாம் உசேனிடம் இருந்து காப்பற்ற அதிகாரி சுனில் குமார் திட்டமிட்டார். தன்னை புரோக்கர் என்று கூறி சதாமிடம் பேசினார். அப்போது சதாம் தன் மனைவி சமீராவுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கேட்டுள்ளார். பின்னர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அவர் குறிப்பிடும் இடத்திற்கு வந்து பணத்தை கொடுத்ததும் சமீராவை ஒப்படைப்பதாக சதாம் கூறினார்.  பேசியபடி புரோக்கர் வராவிட்டால் சமீராவை கத்தியால் குத்தி கொலை செய்யவும் தயாராக இருந்தார்.

    இரவு 8 மணியளவில் சதாமை பிடிக்க போலீஸ் படை தயாராக இருந்தது. ஆனால், சமீராவை அழைத்து வராமல் சதாம் தனியாக வந்துள்ளார். கேட்டதற்கு அட்வான்ஸ் கொடுக்காததால் சமீராவை அழைத்து வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். இதையடுத்து சமீராவை அழைத்து வருவதாகக் கூறி சதாம் சென்றுள்ளார்.

    சமீராவை அழைத்து வந்தபோது, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சமீரா மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். அழகில் மயங்கி இரண்டாவது திருமணம் செய்த சதாம் உசேனின் வாழ்க்கை வீணாகிவிட்டது. தற்போது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.  #ManSellWife
    ×