search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lactating mothers"

    • குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதம் உள்ளது.
    • நோய் எதிர்ப்பாற்றலை கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது.

    தாய்மார்களுக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை ஒரு நாளைக்கு தாய்ப்பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. பருமனானவர், ஒல்லியானவர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தாய்மார்களாலும் இந்த அளவுக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதமான லாக்டால்புமின் (lactalbumin) தாய்ப்பாலில் உள்ளது. இது மாட்டுப்பால் போன்ற பிற மாற்றுப் பொருட்களில் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிற, மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது. தாய்ப்பால் குடிக்கும்போது மட்டுமே குழந்தையின் நாக்கு, வாய் போன்றவை அசைந்து வேலை செய்கின்றன.

    புட்டிப்பாலை பயன்படுத்தும்போது, அது குழந்தைகளின் எதிர்ப்பாற்றலையும் அசைவையும் குறைத்துவிடும். திரும்பவும் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்க மறுக்கும். மார்பகத்தில் இருந்து நேராக பால் புகட்டும்போது தாய்க்கும் சேய்க்குமான அன்பு உறவு வளரும். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உணரும்.

     தாய்ப்பாலைத் தவிர மற்ற பொருள்கள் குழந்தையின் சிறுநீரகத்துக்கு பாதிப்பானது என்பது உண்மையா?

    தாய்ப்பாலைத் தவிர பிற மாற்றுப் பொருட்களையும் குழந்தையால் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் மாட்டுப்பால் போன்ற மாற்றுப்பொருட்களில் உள்ள உப்புச்சத்துகள், ஸ்டார்ச் போன்றவை குழந்தைகளின் இளம் சிறுநீரகத்துக்கு பாரமே. இதனால் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவேதான் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மாடுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதற்கு முன்னர், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு முதன்மையான உட்பொருளாக இருந்தது. மனிதகுலம் அழியாது வளர்வதற்கு தாய்ப்பால் முக்கியக் காரணமாக உள்ளது. பிற பொருட்களைக் கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் சர்க்கரைத்தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது சரியா?

    சர்க்கரைத் தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது மிகவும் தவறு. அதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ கூடாது. இதுகுறித்து சரியான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் வேண்டும். சர்க்கரைத் தண்ணீரைக் கொடுத்தால் குழந்தைகளின் வயிறு நிறைந்து விடும், பசி ஏற்படாது. பசி இருந்தால்தான் குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்கும். குழந்தைகள் பசி எடுத்து சப்புவதுதான் தாய்ப்பால் புகட்டலின் முக்கியமான பகுதி.

    மேலும் தாய்ப்பால் புகட்டுவது தனிமனித செயல்பாடு அல்ல, சமூகச் செயல்பாடு. இதனால் குழந்தைகளின் நலம் உந்தப்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது. தாய்ப்பாலுக்கு மாற்றுப்பொருள் உற்பத்தி செய்தால் ஒரு நாளைக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி என்பது, பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பால் இவற்றில் இருந்து காத்து குழந்தைகளின் நலனை உறுதி செய்கிறது.

    ×