search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilpennathur school van accident"

    கீழ்பென்னாத்தூரில் ஓடும் வேனில் எமர்ஜென்சி கதவு திடீரென திறந்ததால் எல்.கே.ஜி. மாணவி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தாள்.

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சோ.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயி. இவரது மகள் லக்ஷியா (வயது 4). திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் உள்ள காந்தி நகர் நர்சரி பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கிறாள்.

    தினமும், காலை பள்ளி வேன் வீட்டின் அருகே வந்து மாணவியை ஏற்றி செல்லும். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை வேன் வந்தது. சீருடையில் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு தாய்க்கு ‘டாடா’ காட்டிவிட்டு மாணவி வேனில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்தாள்.

    பள்ளி வேனை டிரைவர் வேகமாக இயக்கியுள்ளார். சோ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள ஒரு வளைவில் வேன் திரும்பியது. அப்போது, பின் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த ‘எமர்ஜென்சி’ கதவு திடீரென திறந்தது. இருக்கை பின்பக்கமாக சாய்ந்தது.

    இருக்கையில் உட்கார்ந்திருந்த மாணவி லக்ஷியா வேனில் இருந்து சாலையில் விழுந்தாள். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முகம், கை, கால்களிலும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு மாணவி உயிருக்க போராடினார்.

    வேனில் இருந்து பள்ளி குழந்தை சாலையில் விழுந்து துடிப்பதை கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பதறிபோய் ஓடி சென்று தூக்கினர். வேன் டிரைவர் சற்று தொலைவில் சென்று வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து, ஒரு காரில் மாணவியை ஏற்றிச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனை மீட்டு திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிந்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை நல்லபடியாக வீட்டிற்கு திரும்ப வேண்டுமே என்ற கவலை பெற்றோர்களுக்கு அதிகமாகியுள்ளது. காலை, மாலையில் மாணவ, மாணவிகளை ஏற்றும் முன்பாக வேனில் கதவுகள் மற்றும் இருக்கைகள், வேறு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என டிரைவர், உதவியாளர் பார்க்க வேண்டும்.

    நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகிறதா, குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என கண்டறிய வேண்டும். ஆனால் குழந்தை விழுந்த இந்த பள்ளி வேன் முழுமையாக பராமரிக்கப்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி வேன், பஸ்களை போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். அப்படி, இந்த பள்ளி வேன் நடப்பு கல்வி ஆண்டில் போக்குவரத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை.

    ஏனெனில், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வாகன ஓட்டுனர்களுக்கு மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, வாகனங்களை முறையாக கண்காணித்து பராமரிப்பது போன்ற விதிமுறைகள் எடுத்துரைக்கப்படும்.

    இதுசம்பந்தமாக வேன் டிரைவர் மீது மட்டுமின்றி பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் வலியுறுத்தினர்.

    ×