search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasu Mela Kasu"

    கே.எஸ்.பழனி இயக்கத்தில் ஷாரூக் - காயத்ரி ரெமா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காசு மேலே காசு' படத்தின் விமர்சனம். #KasuMelaKasu
    மயில்சாமியின் மகன் நாயகன் ஷாரூக். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி தனது மகனை பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க வைத்து எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர்கள் பகுதியில் இருக்கும் பணக்கார வீட்டு பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்க சொல்கிறார். 

    இதுஒருபுறம் இருக்க தனது அப்பாவும், அம்மாவும் பிச்சை எடுப்பதை விரும்பாத நாயகி காயத்ரி ரீமா, தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கிறாள். அதன்படி அவர்களது பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் வேலைக்கும் சேர்கிறாள்.



    இந்த நிலையில் அந்த பங்களாவில் இருந்து வரும் காயத்ரி ரீமாவை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரி என்று நினைத்து, தனது மகனை காதலிக்க சொல்கிறார் மயில்சாமி. இதையடுத்து காயத்ரியிடம் தனது காதலை சொல்லும் ஷாரூக், காயத்ரியிடம் சம்மதமும் வாங்குகிறார். 

    இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் காயத்ரி ரீமாவை கடத்தி செல்கின்றனர். ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் அவளை உயிருடன் அனுப்புவதாக கூற, சொத்து ஆசையால், தனது வீட்டை அடமானம் வைத்து பணத்தை தயார் செய்கிறார் மயில்சாமி. 



    கடைசியில், காயத்ரி ரெமாவை மீட்டார்களா? காயத்ரி ரெமா பணக்கார வீட்டுப் பெண் இல்லை என்பது மயில்சாமிக்கு தெரிந்ததா? ஷாரூக் - காயத்ரி ரெமா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நாயகனாக நடித்திருக்கும் ஷாரூக், பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகளில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி காயத்ரி ரெமா சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக வந்து செல்கிறார். படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு மயில்சாமி முக்கிய காரணமாக இருந்துள்ளார். நாயகியின் அப்பாவாக பிச்சைக்காரராக நடித்திருப்பவர் மயில்சாமியுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்திருக்கிறார். 



    பேராசை பெருநஷ்டம் என்ற கருத்தை மையப்படுத்தி வழக்கமான கதையுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி. தற்போதைய அரசியல், சினிமா என அனைத்தையும் பிச்சைக்காரர் ஒருவரின் கண்ணோட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். வசனங்களுக்கு சிரிப்பு மழை கேட்கிறது. காமெடியுடம், சுறுசுறுப்பாக ரசிக்கும்படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 

    எம்.எஸ்.பாண்டியன் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சுரேஷ் தேவன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `காசு மேல காசு' சிரிப்பு விருந்து. #KasuMelaKasu

    ×