search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Japan hangs"

    டோக்கியோ நகரில் சுரங்கப்பாதையில் 1995-ம் ஆண்டு நிகழ்ந்த விஷ வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 6 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. #Japan #SubwayGasAttack
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி ‘சரின்’ என்னும் விஷ வாயு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த தாக்குதலில் அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (வயது 63) என்ற சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.



    இதில் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றமான டோக்கியோ மாவட்ட கோர்ட்டு 2004-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை ஜப்பான் சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு உறுதி செய்தது. ஆனாலும் தண்டிக்கப்பட்டவர்கள் பல்வேறு வகையில் தூக்கில் இருந்து தப்புவதற்கு சட்டப்போராட்டங்கள் நடத்தி, அவை தோல்வியில் முடிந்தன.

    அதைத் தொடர்ந்து ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த 6 பேரும் இந்த மாத தொடக்கத்தில் தூக்கில் போடப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்தக் குழுவில் எஞ்சி இருந்த 6 பேரும் நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர்.

    இது தொடர்பாக டோக்கியோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி யோகோ காமிக்கவா, “இது வரை இல்லாத மிகக் கொடிய குற்றம் ஆகும். இனி ஒரு முறை இப்படி நேர்ந்து விடக்கூடாது. இது ஜப்பான் மக்களை மட்டுமின்றி வெளிநாடுகளையும் உலுக்கியது. எனவே தான் தண்டிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மிகுந்த கவனத்துடன் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் உத்தரவு போட்டு இருந்தேன்” என கூறினார்.  #Japan #SubwayGasAttack
    ×