என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government statistic"

    அரசு புள்ளி விவரம் மூலம் பெண்கள் வாழ தகுதி அற்ற மாநிலம் தமிழகம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது பெண்களும், குழந்தைகளும் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் தவறியது கண்டிக்கத்தக்கது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலரும், காவல்துறை தலைமை இயக்குனரும் தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் மகளிரும், குழந்தைகளும் தமிழகத்தில் எந்த அளவுக்கு ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது ஒருபுறமிருக்க, இத்தகைய குற்றங்களைச் செய்தவர்களில் 95 சதவீதக்கும் மேற்பட்டோர் தண்டனை பெறாமல் தப்பி விடுகின்றனர் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

    2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 11,625 ஆகும். இவற்றில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 257 மட்டும் தான். இது மொத்த வழக்குகளில் எண்ணிக்கையில் வெறும் 2 சதவீதம் மட்டும் தான். அதேநேரத்தில் 1244 வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    1961 பேர் வேறு காரணங்களால் தண்டிக்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றனர். அதாவது விசாரணை முடிந்த வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்களின் அளவு, தண்டிக்கப்பட்டவர்களின் அளவை விட 12 மடங்குக்கும் அதிகமாகும்.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளது. குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரித்துள்ளது’’ என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவரது கூற்று தவறானது என்பதை அவரது அரசு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புள்ளி விவரங்களே நிரூபித்திருக்கின்றன. இத்தகைய இழிநிலைக்கு தமிழகத்தை தள்ளியவர்கள் வெட்கப்பட வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை மகளிருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் விசாரிப்பதில்லை.

    இந்த நிலையை மாற்றி, மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்துதல், கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அதிக எண்ணிக்கையில் புதிய காவல் நிலையங்களைத்திறத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கென தனிப் பிரிவை மகளிர் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ×