search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen's Association"

    • நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும், விசைப்படகுகளை இலங்கைக்கு கொண்டு நாட்டுடமை ஆக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒருசில சமயங்களில் மீனவர்களை விரட்டி அடிப்பதும், அவர்கள் காயங்களுடன் கரை திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

    நேற்று முன்தினம் கூட ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் துரத்தி அடித்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 492 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்சன், சகாயராஜ் ஆகியவர்களின் இரண்டு விசைப் படகை சிறைபிடித்தனர்.

    இதில், ஜேம்சன் படகில் இருந்த மீனவர்கள் வெக்கர் (27), மார்டின் (27), மணி, சிதம்பரம் (47), ஆரோன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஷ், சுதாகர், ஜெரால்டு, சுமுல், ஆக்கு மற்றும் சகாயராஜ் படகில் இருந்த படகில் இருந்த ராபர்ட் (40), ஜாக் ஷஷன் (44), சாமுவேல் (24), மெல்சன் (24), லெனின் (45), கேவா (40), ரஞ்சித் (42), அசோந்த் (19), லவ்சன் (40), லிஸ்டன் (30), இளங்கோ (50) ஆகிய 23 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் 23 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலங்கையில் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கைதான மீனவர்கள் குறித்த விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை சிறைபிடித்து இலங்கை கடற்படைக்கு ராமேசுவரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×