search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engagement girl molestation"

    திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த சென்னை போலீஸ்காரர் தனிப்படை போலீசில் சிக்கியுள்ளார். இது குறித்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினர் பாதுகாப்பில் வசித்து வந்தார். இளம்பெண்ணுக்கு உறவினர்கள் சென்னையில் டிரைவர் வேலை பார்க்கும் வாலிபரை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். திருமண நிச்சயத்திற்கு பிறகு இளம்பெண்ணும், டிரைவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் டிரைவரை பார்க்க இளம்பெண் தனியாக சென்றார்.

    சென்னை சென்ற இளம்பெண் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி சென்னையில் உள்ள டிரைவரை உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், சென்னை கோயம்பேட்டில் நிற்பதாக எனக்கு போன் செய்தார்.

    அன்று நான், வெளியூர் சவாரி சென்றிருந்தேன். இதனால் அந்த பெண்ணை உடனடியாக ஊருக்கு புறப்பட்டு செல்லும்படி கூறினேன், என்றார். அந்த பெண் ஊர் திரும்பாததால் அவர், சென்னையில் மாயமாகி இருக்கவேண்டும் என்று உறவினர்கள் கருதினர்.

    மாயமான பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் மனு கொடுத்தனர். அவர், மாயமான பெண்ணை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.

    தனிப்படை போலீசார் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை அழைத்து விசாரித்தனர். அவரிடம் பெண் பேசிய செல்போன் எண்ணை கைப்பற்றினர். அந்த எண்ணுக்கு சொந்தமான நபரை கண்டுபிடிக்க முயன்றனர்.

    இதில் அந்த எண்ணுக்குரிய நபர் சென்னையைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது. அந்த பெண்ணின் பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் அந்த சென்னை பெண் விபசார கும்பலுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. இதன் மூலம் டிரைவரை தேடி சென்னை சென்ற குமரி பெண் விபசார கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு ஏற்பட்டது.

    அவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விபசார கும்பலுடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர், குமரி பெண்ணை சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

    குமரி தனிப்படை போலீசார் சென்னை போலீஸ்காரரையும் கண்டுபிடித்து விசாரித்தனர். இதில், குமரி பெண்ணை கடத்தி சென்றது விபசார கும்பலைச் சேர்ந்த பெண்ணும், சென்னை போலீஸ்காரரும்தான் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று குமரி பெண், கண்டுபிடிக்கப்பட்டார்.

    மீட்கப்பட்ட குமரி பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற விபசார கும்பலைச் சேர்ந்த பெண், சென்னை போலீஸ்காரர் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று நாகர்கோவில் அழைத்து வந்தனர். இங்கு வந்ததும் மீட்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை தேடி சென்னைக்கு சென்றேன். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து டிரைவரின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நின்றேன். அப்போது பெண் ஒருவர் என்னிடம் வந்து விவரம் கேட்டார். அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். அந்த பெண், என்னை டிரைவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.

    மேலும் டிரைவர் சென்னையில் வேலை பார்ப்பதால் எனக்கும், சென்னையிலேயே வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவருக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் என்னை ஒப்படைத்தார். அந்த போலீஸ்காரர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அவரிடமிருந்து தப்பி வெளியே வந்தேன். சாலையில் நடந்து சென்றபோது, இன்னொரு வாலிபரும் என்னை கடத்திச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்தார். பின்னர் ஊருக்கு வர ரெயில் நிலையம் வந்தபோது, குமரி மாவட்ட போலீசார் என்னை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்தனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    பின்னர் மேலும் பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறும்போது, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர், கூறும் தகவலின்பேரில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×