search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri family dispute"

    நல்லம்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் கழுத்தை அரிவாளால் அறுத்தது தொடர்பாக கைதான விவசாயி தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள பாலஜக்கமனஅள்ளி சேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மனைவி சிவகாமி(வயது55).

    இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அரிவாளல் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் அலறியபடியே ஓடிவந்தார்.

    அவரது அலறல் சத்தம்கேட்டு உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு தருமபுரி அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிவகாமியின் மகன் சரவணன் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான பொன்னுசாமி (72) என்பவர் ஆடுகளுக்கு இலைகளை வெட்டிபோடும் அரிவாளால் சிவகாமியின் கழுத்தை அறுத்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பொன்னுசாமியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்தாவது:

    பொன்னுசாமியின் மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு சின்னசாமி, செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    பொன்னுசாமிக்கும், பெரியம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கோபமடைந்து பொம்மிடி ஜாலிகொட்டாய் ஊரில் உள்ள தனது உறவினருக்கு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெரியம்மாள் தனது பேத்தியின் புனித நீராட்டு விழாவிற்காக சேவன்கொட்டாயுக்கு வந்து இருந்தார். அப்போது அவர் பொன்னுசாமி வீட்டில் தங்காமல், அருகில் இருந்த உறவினர் சித்தன் வீட்டில் தங்கியிருந்தார்.

    பெரியம்மாள் மீண்டும் ஊருக்குள் வந்திருந்ததை அறிந்த பொன்னுசாமி அவரை சந்தித்து மீண்டும் குடும்ப நடந்த அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை பெரியம்மாள் ஏற்காமல் வரமறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    நேற்று அதிகாலை 4 மணியளவில் சித்தன் வீட்டில் இருந்து சிவகாமி வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருட்டில் மறைந்து இருந்த பொன்னுசாமி வெளியே வருவது தனது மனைவி பெரியம்மாள் என்று நினைத்து பின்னால் சென்று சிவகாமியின் கழுத்தை அரிவாளால் அறுத்தார்.

    அப்போது சிவகாமி தான் உங்களது மனைவி இல்லை என்று கூறியதாக தெரிகிறது. உடனே பொன்னுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிவகாமி அலறியதால், உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட பொன்னுசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
    ×