search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi woman employee molestation"

    கும்பகோணத்தில் நள்ளிரவில் டெல்லி பெண் ஊழியரை கற்பழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #kumbakonamgirlmolestation

    கும்பகோணம்:

    டெல்லியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் 23 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு பதவி உயர்வுக்கான பயிற்சி கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதற்காக அந்த பெண் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்து கடந்த 2-ந் தேதி திருச்செந்தூர் ரெயிலில் இரவு 10.30 மணிக்கு கும்பகோணம் சென்றார்.

    ஏற்கனவே பயிற்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுடன் தொடர்பு கொண்டு ரெயில் நிலையத்திற்கு வருமாறு கூறினார். அந்த சமயத்தில் மழை பெய்ததால் ரெயில் நிலையத்தில் காத்திருக்குமாறு கூறினர்.

    நீண்ட நேரமாகியும் வராததால் அந்த இளம்பெண் தன் தோழிகளிடம் தொடர்பு கொண்டு அவர்கள் தங்கி உள்ள ஓட்டல் விவரங்களை கேட்டார்.

    நள்ளிரவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் ஓட்டலுக்கு சென்றார். ஆட்டோ டிரைவர் வெவ்வேறு பாதைகளில் சுற்றி சுற்றி வந்ததால் பயந்துபோன இளம்பெண் அழுது கூச்சலிட்டார்.

    இதனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண்ணை செட்டி மண்டபம் பைபாஸில் நள்ளிரவில் நடுவழியில் இறக்கி விட்டு சென்றார்.

    அப்போது அங்கு 4 வாலிபர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அவர்களிடம் ஆங்கிலத்தில் ஓட்டல் வழியை கேட்டார். உடனே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பெண்ணை அழைத்து சென்றார். அந்தப் பெண்ணிற்கு பின்னால் மற்றொரு வாலிபரும் ஏறிக்கொண்டார். நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டிற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    மது அருந்திக் கொண்டிருந்த மற்ற 2 பேரையும் செல்போன் மூலம் வரவழைத்து 4 பேரும் சேர்ந்து கொடூரமாக கற்பழித்தனர். 2 மணி நேரம், காம கொடூரர்களுடன் போராடினார்.

    பின்னர் அந்தப் பெண்ணை வாலிபர்களில் ஒருவர் நாச்சியார்கோவில் மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்தப் பெண்ணும் வாலிபரும் ஏறிக்கொண்டனர்.

    கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவை நிறுத்தி அந்த வாலிபர் இறங்கி கொண்டார். அவர் ஆட்டோ டிரைவர் செல்போனில் தனது நண்பருடன் பேசி வரவழைத்தார். அவர் வந்ததும் ஆட்டோ டிரைவரிடம் அந்தப் பெண்ணை ஓட்டலில் விடுமாறு கூறி நண்பருடன் சென்றுவிட்டார்.

    அந்தப் பெண் தன்னை வந்து இறக்கிவிட்ட ஆட்டோ எண்ணை குறித்து வைத்துக் கொண்டார். முன்னதாக வாலிபர் தனது நண்பருடன் பேசும் போது அவர் சொன்ன செல்போன் எண்ணையும் மனதில் பதிய வைத்திருந்தார்.

    அதன் பிறகு இளம்பெண் ஓட்டலில் தங்கியிருந்த தோழிகளிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறினார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும், பெற்றோருக்கும் தெரிவித்தனர்.

    இந்த கொடூர பாலியல் பலாத்கார சம்பவத்தை போலீசார் வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பெண்ணை ஓட்டலில் இறக்கி விட்ட ஆட்டோ டிரைவர் கும்பகோணம் மேற்கு போலீசில் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு டெல்லியில் இருந்து வந்த இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அப்போது அந்த பெண் தான் வந்து ஓட்டலில் இறங்கிய ஆட்டோ பதிவு எண்ணையும், தான் மனதில் பதிந்து வைத்திருந்த வாலிபர் கூறிய செல்போன் எண்ணையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் சிக்கினார். அந்த செல்போன் எண் கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகன் வசந்துக்கு உரியது என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரும் அவருடைய நண்பர்களான தினேஷ் (24), புருஷோத்தமன் (19), அன்பரசன் (19) ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து 4 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இளம்பெண் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். முன்னதாக கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களிடம் கடுமையாக விசாரணை நடத்தினார்.

    இதில் 4 வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறுகிறது. #kumbakonamgirlmolestation

    ×