search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contractor suicide"

    நெல்லித்தோப்பில் காண்டிராக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாச்சி வீதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது48). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலையை காண்டிராக்டு அடிப்படையில் செய்து தரும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சோபியா என்ற மனைவியும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

    இதற்கிடையே சமீபகாலமாக ஜெயராஜிக்கு கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை அமையவில்லை. மேலும் மதுகுடிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி கொண்ட ஜெயராஜ் மதுகுடிக்கவும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்க முடியாமலும் திண்டாடி வந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.

    நேற்று காலை சோபியா கணவருக்கும், மகளுக்கும் உணவு தயாரித்து வைத்துவிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பார்க்க சென்றிருந்தார். இந்த நிலையில் மதியம் ஜெயராஜ் மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு மதுபாட்டிலுடன் வந்தார்.

    வீட்டின் கீழ்தளத்தில் மகள் திவ்யா விளையாடி கொண்டு இருந்த வேளையில் ஜெயராஜ் கையில் கொண்டு வந்த மீதி மதுவை குடித்து விட்டு வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து திவ்யா வீட்டுக்குள் வந்து பார்த்த போது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாய் சோபியாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சோபியா இதுபற்றி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து ஜெயராஜ் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா?அல்லது வேறுஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×