search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China pigs killed"

    சீனாவில் பன்றிகளுக்கு சுவைன் காய்ச்சல் நோய் தாக்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளை கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுஉள்ளன. #swinefever
    பீஜிங்:

    பன்றி உள்ளிட்ட சில விலங்களுக்கு ‘ஆப்ரிக்கன் சுவைன் காய்ச்சல்’ என்ற நோய் பரவுவது உண்டு. இந்த நோயை குணப்படுத்த மருந்துகளோ, முன்கூட்டியே தடுக்கும் மருந்துகளோ இல்லை.

    தற்போது ரஷியாவில் இந்த நோய் பன்றிகளுக்கு பரவி உள்ளது. அங்கிருந்து சீனாவிலும் நோய் தாக்குதல் பரவி இருக்கிறது.

    சீனாவில் கடந்த மே மாதம் நோய் பரவி இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது லையூங்கன் நகரில் ஏராளமான பன்றிகளுக்கு இந்த நோய் பரவி உள்ளது.

    உலகில் பன்றி இறைச்சி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. லையூங்கன் நகரில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. 40 லட்சம் பன்றிகள் அங்கு மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

    அங்கு பன்றிகளுக்கு இந்த நோய் தாக்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளை கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுஉள்ளன.

    தொடர்ந்து பல இடங்களிலும் ஆய்வு நடந்து வருகிறது. தடுப்பு மருந்து இல்லாததால் இந்த நோய் தாக்கினால் சில நாட்களில் பன்றி இறந்துவிடும். நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கு பாதிக்கப்பட்ட பன்றிகளை கொன்றுவிட வேண்டும். இல்லை என்றால் அவற்றின் மூலம் மற்ற பன்றிகளுக்கும் பரவி விடும்.

    எனவே தான் பன்றிகளை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் சீனாவில் பன்றி பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பன்றிகளுக்கு ஏற்படும் இந்த காய்ச்சல் மனிதனுக்கு பரவுவதில்லை. அதே நேரத்தில் இவற்றை கட்டுப்படுத்தாவிட்டால் ஏராளமான பன்றிகள் அழிவதுடன் காட்டு விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தான் அதை கட்டுப்படுத்த சீனா தீவிரம் காட்டி வருகிறது.  #swinefever
    ×