search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy jeeva samadhi"

    கண்ணமங்கலம் அருகே ஜீவ சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் தனநாராயணன் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர் தனநாராயணனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டனர்.

    அப்போது அந்த பகுதிக்கு வந்த சாமியார் ஒருவர் தனநாராயணின் கையை பிடித்து பார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார் என கூறினார்.

    இதையடுத்து உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர்.

    இறந்த சிறுவனின் தந்தை அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்திணங்க சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் தனநாராயணன் ஜீவ சமாதி அல்லது ஜலசமாதி ஆனதாகவும், அவருக்கு சித்தர் சமாதி அமைத்து வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

    போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில், ஆரணி டி.எஸ்.பி. செந்தில், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்

    அவர்கள் புதைக்கப்பட்ட தனநாராயணனின் உடலை இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

    சிறுவன் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்யாமலும், உடலை பிரேத பரிசோதனை செய்யாதது குறித்தும் சந்தவாசல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×