என் மலர்
நீங்கள் தேடியது "armed robbery"
- கருப்பு ஆடை, முகமூடி, கையுறை அணிந்து துப்பாக்கியுடன் மிரட்டினர்
- ஹாப்ஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
அமெரிக்காவில் 4 கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களின் நகைக் கடைகளை குறிவைத்து பயங்கர ஆயுதங்களை கொண்ட ஒரு கூட்டம் கொள்ளையடித்து வந்தது.
இந்த கடைகளில் பெரும்பாலும் கடையை நடத்துபவரின் குடும்பத்தினரே ஊழியர்களாக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலால் குறி வைக்கப்பட்ட 9 தெற்காசிய நகைக் கடைகளில், 4 கடைகள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது.
ஜனவரி 7, 2022-இல் இருந்து ஜனவரி 27, 2023 வரையிலான மாதங்களில் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வர்ஜீனியா மற்றும் புளோரிடாவில் ஆசிய அமெரிக்கர்களுக்கு சொந்தமான நகை கடைகளில் இந்த கும்பல் கொள்ளைகளில் ஈடுபட்டது.
பெரும்பாலும் சிறு வணிகர்களை குறி வைத்து, பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.
கருப்பு ஆடையுடன் கையுறைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து மாறுவேடமிட்ட இந்த கும்பல், துப்பாக்கி ஏந்தியபடி கொள்ளையடித்து, கொள்ளைக்கு பிறகு தப்பி ஓட எப்பொதும் திருடப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியது.
முகமூடியணிந்து திடீரென கடைக்குள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடை பணியாளர்களை மிரள செய்து கைகளில் கிடைக்கும் பணத்தையும், நகைகளையும் எடுத்து கொண்டு வேகமாக ஓடி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.
பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்ததால், பல மாநில அதிகாரிகளும் ஒன்றுபட்டு கூட்டு நடவடிக்கையின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
நீண்ட விசாரணைக்கு பின், பல தடயங்களை வைத்து, இக்குற்றத்தில் ஈடுபட்டதாக 16 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கொள்ளை கூட்டத்தை கைது செய்தனர். இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களில் ஒருவர் வீட்டில் இருந்து பல துப்பாக்கிகளும், சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான ரொக்கமும் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 19 குற்றச்சாட்டுகளுடன், ஹாப்ஸ் சட்டம் எனப்படும் "மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத்தில் தலையிட சதி செய்தல்" எனும் பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 20 வருடங்களுக்கும் மேலான சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். முகமூடி அணிந்து, அச்சுறுத்தி, பெரும் பணமதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பலை ஒருங்கிணைந்து தேடி, வெற்றிகரமாக கண்டுபிடித்த காவல்துறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- வாடிக்கையாளர்கள் விரைவாக எடுத்து செல்ல வசதியாக அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்தன
- திருட்டினால ஏற்படும் பொருளாதார இழப்பு காலாண்டு வருமானத்தை பாதிக்கிறது
அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய பரப்பளவில் அனைத்து வகையான பொருட்களும் அங்கேயே கிடைக்கும் வகையில் அங்காடிகளை உருவாக்கி வர்த்தகம் செய்து வருகிறார்கள்.
இவற்றில் வால்மார்ட், பெஸ்ட் பை, டார்கெட், மேஸீஸ் போன்ற பல்பொருள் அங்காடிகளும், மருந்து பொருட்களுக்கான அங்காடிகளான சிவிஎஸ் மற்றும் வால்க்ரீன்ஸ் போன்றவையும் மிகவும் பிரபலமானவை.
இத்தகைய அங்காடிகளில் மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை விரைவாக தேர்ந்தெடுத்து உடனடியாக பணம் செலுத்தி எடுத்து செல்ல வசதியாக பல திறந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், சமீப காலமாக இது போன்ற அங்காடிகளில் கொள்ளைகளும், திருட்டுகளும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. முகமூடி அணிந்து, பயங்கர ஆயுதங்களுடன் வந்து பணியாளர்களை மிரட்டி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதும், கடைக்குள் பொருட்களை வாங்குவது போல் வந்து கண்காணிப்பு கேமிராவின் பார்வையிலிருந்து மறைந்து சிறு சிறு விலை குறைவான பொருட்களை திருடுவதும் அங்கு அதிகரித்து வருகிறது.
இதனால் அனைத்து அங்காடிகளிலும் திறந்தவாறு அலமாரிகளில் பொருட்களை வைக்கும் முறையை மாற்றி, அவற்றை கண்ணாடி அலமாரிகளில் வைத்து அவற்றிற்கு பூட்டும் போட தொடங்கி விட்டனர்.
இத்தகைய சில்லறை வணிக திருட்டுகளும், திட்டமிட்ட பெரும் கொள்ளைகளும் இந்த பல்பொருள் அங்காடிகளின் வருடாந்திர காலாண்டு வருமானங்களில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளதால் இத்தகைய முடிவை எடுக்க நேர்ந்ததாக அங்காடி மேலாளர்கள் கூறுகின்றனர்.
2021ல் வால்க்ரீன்ஸ் சங்கிலித்தொடர் மருந்தக அமைப்பு, அமெரிக்காவின் ஸான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள 5 கடைகளை, சில்லறை திருட்டு அதிகரிப்பால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க முடியாமல் மூடி விட்டது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிக பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே அங்காடிகளில் பெரும் கொள்ளைகள் நடப்பது வாடிக்கையாகி வருவது பலரை வியக்க வைத்தாலும், நலிந்து வரும் உலக பொருளாதாரமும், வேலையின்மையும் அதிகரிக்கும் போது இது இன்னமும் அபாயகரமாக அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.






