என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agitating"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த ஆறு நாட்களாக நடத்திவந்த தொடர் போராட்டம் இன்று தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. #Punjabfarmersstir
    சண்டிகர்:

    விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.

    இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாய சங்கங்களும் இந்த போராட்டத்தில் குதித்தன. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மற்றும் பால் போன்றவற்றை சந்தைகளுக்கு அனுப்ப கூடாது என சங்கத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி மற்றும் தானியங்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த ஆறு நாட்களாக நடத்திவந்த தொடர் போராட்டம் இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அம்மாநில விவசாய சங்கத் தலைவர் பல்பிர் சிங் ராஜேவால் தெரிவித்துள்ளார்.

    இந்த வாபஸ் முடிவு தற்காலிகமானதுதான், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாட்டின் பிறபகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் பத்தாம் தேதிவரை தொடரும். அரசின் நடவடிக்கையை பொருத்து எங்களது அடுத்தகட்ட போராட்டத்துக்கான திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். #Punjabfarmersstir
    ×