search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "94 பவுன் கொள்ளை"

    நகை பட்டறை அதிபரை கத்தியால் குத்தி 94 பவுன் நகையை 4 பேர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கத்திடலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரவணன் (வயது 36).

    இவர், காரைக்குடி அம்மன் சன்னதி பஜாரில் நகை பட்டறை நடத்தி வருகிறார். சரவணனிடம் பலரும் நகை ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

    தனது பட்டறையில் நகைகளை தயாரிக்கும் சரவணன் அதில் ‘ஹால்மார்க் முத்திரை’ பதிக்க மதுரை கொண்டு செல்வார். நேற்று காலை நகைகளுடன் பட்டறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்சில் சரவணன் மதுரை சென்றார். அங்கு வேலையை முடித்துவிட்டு இரவில் காரைக்குடி திரும்பினார். பின்னர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சரவணன் வீட்டுக்கு புறப்பட்டார்.

    சங்கத்திடல் பகுதியில் வந்தபோது, அங்கு நின்ற 4 பேர் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த நகைகளை கேட்டனர்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சரவணனின் கழுத்தில் கத்தியால் குத்தினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணன் வைத்திருந்த நகைகளை 4 பேரும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சரவணன், காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். 94 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். கழுத்தில் காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சரவணன் மதுரைக்கு நகைகளை கொண்டு சென்று வருவதை அறிந்த யாரோ திட்டமிட்டு இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர்.

    நகைப்பட்டறை அதிபரை கத்தியால் குத்தி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×