என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
    • இங்கு லட்சுமி தேவி, கனகவல்லித்தாயார் என்ற பெயருடன் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப் படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

    வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

    தாயாருக்கு தங்கமனசு

    இங்கு லட்சுமி தேவி, கனகவல்லித்தாயார் என்ற பெயருடன் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    'கனகா' என்றால் 'தங்கம்' என்று அர்த்தம். செல்வத்தையும், சுமங்கலி பாக்கியத்தையும் அள்ளித்தரும், தங்க மனம் கொண்ட இந்த தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபமேற்றி வழிபட்டால் விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும்.

    லட்சுமியின் அம்சமான வில்வமரம் இங்கு தல விருட்சமாக உள்ளது. திருவிழா காலத்தில் கோவிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

    கோவில் அமைப்பு

    ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    ராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், பன்னிரு ஆழ்வார், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

    அகோபிலம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் இங்கு உள்ளது. இங்குள்ள ஐந்து தீர்த்தங்களுக்கு ஜமத்கனி, இந்திர, பிருகு, வாமன, கருட தீர்த்தம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இரட்டிப்பு பலன்

    சுமங்கலி பாக்கியம் மட்டுமின்றி, மன அமைதி வேண்டியும், கடன் தொல்லை, கிரக தோஷம், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் தாயாருக்கு நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.

    வேண்டுதல் நிறைவேறியதும் தாயாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வஸ்திரம் சாத்துகின்றனர்.

    வரலட்சுமி விரதத்தன்று பிரார்த்தனைகளைச் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

    இருப்பிடம்: கடலூர் - புதுச்சேரி சாலையில் 15 கி.மீ., தூரத்தில் தவளைக்குப்பம். இங்கிருந்து பிரியும் சாலையில் ஒன்றரை கி.மீ தூரத்தில் கோவில்.

    நேரம்: காலை 7.00 - 12.00, மாலை 4.30 - இரவு 9.00 மணி.

    • தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
    • சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தசஅவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும். இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோவிலின் மூல மூர்த்தியாக அமையப்பெற்றுள்ளது.

    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ் நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயு£த்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோவிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது. இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோவில்.

    6. இத்திருக்கோவில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோவிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோவிலான இத்திருக்கோவில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோவிலும் அமையப்பெற்றது வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:

    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:

    காலை 9.00 மணி காலைசந்தி

    பகல் 12.00 மணி உச்சிக்காலம்

    மாலை 6.00 மணி நித்தியாணு

    மாலை 6.30 மணி சாயரட்சை

    இரவு 8.30 மணி அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • வைகாசி மாதம் இங்கு நரசிம்மர் உற்சவம் நடத்தப்படுகிறது.
    • தேர்தலில் போட்டியிடுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது.

    1. ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது.

    2. சப்தரிஷிகளும் இங்கு தவம் செய்து நரசிம்மர் காட்சியைப் பெற்றுள்ளனர்.

    3. பூவரசன்குப்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்புப் பெற்றது.

    4. இங்கு சுவாமிகளுக்கு திருமண் சாத்தப்படுவதில்லை. கஸ்தூரி திலகம் மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல ராமானுஜர் காலத்துக்கு முந்தைய சங்கு, சக்கரம் முறையே இங்கு நடைமுறையில் உள்ளது.

    5. சுவாதி நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமம் செய்து வழிபடுவது அதிக பலன்களைத் தரும்.

    6. தன்வந்திரி ஹோமமும், சுதர்சன ஹோமமும் இத்தலத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது.

    7. ஹிரண்யகசிபு வதம் முடிந்ததும் நரசிம்மர், முதன் முதலாக பூவரசன்குப்பத்தில்தான் தாயாருடன் காட்சிக் கொடுத்தார். எனவே இத்தலம் "தென் அகோபிலம்" என்று புகழப்படுகிறது.

    8. அகோபிலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரும், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரும் அளவு, உயரம், அகலம், அழகு, வடிவமைப்பு உள்பட அனைத்து அம்சங்களிலும் ஒரேமாதிரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    9. இத்தலத்தில் நரசிம்மரிடம் நாம் நம்மை ஒப்படைத்து விட்டால் ரூணம் (கடன்) ரோகம் (நோய்) சத்ரு (எதிரி) ஆகிய மூன்று தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    10. சுவாதி நட்சத்திரத் தினத்தன்று இத்தலத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை திருமஞ்சனம், 9 மணிக்கு ஹோமப்பூஜைகள் 12 மணிக்கு பூர்ணாஹ§தியும், மதியம் 1 மணிக்கு கலசதீர்த்தமும் நடைபெறும்.

    11. 2004&ம் ஆண்டு இத்தலத்தில் திருப்பணி செய்யும்போது ஆண்டாள் சன்னதி அருகே தோண்டியதில் அபூர்வமான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. அந்த பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. 12 நவராத்திரி நாட்களில் இத்தலத்தில் நடக்கும் ஹோம பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 டன் பழ வகைகள், சுமார் ஆயிரம் லிட்டர் நெய், தேன் அந்த யாகத்தில் பயன்படுத்தப்படும்.

    13. ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று இத்தலத்தில் பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது.

    14. வைகாசி மாதம் இங்கு நரசிம்மர் உற்சவம் நடத்தப்படுகிறது.

    15. தேர்தலில் போட்டியிடுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது.

    16. முப்பதாறு சுவாதி நாட்களில் இங்கு வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    17. சனி, புதன்கிழமைகளில் இத்தலத்தில் வழிபடுவதை பக்தர்கள் சிறப்பாக கருதுகிறார்கள்.

    18. பூவரசன்குப்பத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் வழிபடலாம்.

    19. முதல்&அமைச்சரின் அன்னதானத் திட்டம் இத்திருக் கோவிலில் தினமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    20. பூவரசன்குப்பம் ஆலயம் தொடர்பான கூடுதல் தகவல்களை தலைமை குருக்கள் பார்த்தசாரதியிடம் 95851 78444 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

    • ஒருநாள் சங்கரர், தம்முடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லத் தயாராக அமர்ந்தார். எல்லா சீடர்களும் அவருக்கு முன்னால் அமர்ந்தனர்.
    • ஆனால், அங்கு கிரி என்ற சீடர் காணப்படவில்லை. அவர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். அவருடைய வருகைக்காக சங்கரர் காத்திருந்தார்.

    ஒருநாள் சங்கரர், தம்முடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லத் தயாராக அமர்ந்தார். எல்லா சீடர்களும் அவருக்கு முன்னால் அமர்ந்தனர்.

    ஆனால், அங்கு கிரி என்ற சீடர் காணப்படவில்லை. அவர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். அவருடைய வருகைக்காக சங்கரர் காத்திருந்தார்.

    "மந்தபுத்தி மாணவனுக்காக நம் குருநாதர் காத்திருக்க வேண்டுமா?" என்று மற்ற மாணவர்கள் பேசிக் கொண்டனர்.

    வெளியில் சென்றிருந்த கிரி மிகவும் மகிழ்ச்சியுடன் நர்த்தனம் செய்து, பாடிக்கொண்டே வந்தார். அப்படி அவர் என்னதான் பாடினார்?

    விகிதா கி ல ஸாஸ்த்ர ஸ§தா ஜலதே

    மஹிதோப நிஷத் கதி தார்த்த நிதே

    ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

    பவ சங்கர தேசிகமே சரணம்

    என்று தமது குருநாதரைக் குறித்துப் பாடியவாறு வந்தார் கிரி. தோடக விருத்தம் என்ற சந்தக் கவிதையில் தமது குருநாதரைப் போற்றி எட்டு சுலோகங்களைப் பாடினார் கிரி.

    மந்தபுத்திக்காரர் என்று கருதிய மாணவர் சந்தக்கவிதை இயற்றும் திறமை பெற்றவர் என்பதை மற்ற மாணவர்கள் அப்போதுதான் உணர்ந்தனர்.

    தோடக விருத்தத்தில் அமைந்த எட்டுப் பாடல்கள், 'தோடகாஷ்டகம்' என்று பெயர் பெற்றது. அதனை இயற்றிய கிரியை, 'தோடகாச்சாரியர்' என்றே அழைத்தனர்.

    ஆறாயிரம் மாணவர்கள் ஆதி சங்கரரிடம் பாடம் கேட்டனர்.

    எனினும், தட்சிணாமூர்த்தியிடம் பாடம் கேட்ட சனகாதி நால்வரைப் போல், சுரேஸ்வராச்சாரியர், பத்மபாதாச்சாரியர், ஹஸ்தாமலகர், தோடகாச்சாரியர் ஆகிய நால்வரும் முன்னணி மாணவர்களாக திகழ்ந்தனர்.

    • வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.
    • அதேபோல் கருவறையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

    கோவிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபர்னிக்கா ஆறு ஓடுகிறது.

    கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசீர்வதித்து நீரோடையை உருவாக்கி தந்தார்.

    அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக்கூறப்படுகிறது.

    கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆற்றில் 64 வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன.

    இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது.

    தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோவில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.

    அதேபோல் கருவறையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

    இரவு சந்நிதானம் அடைபடுவதற்கு முன் அம்பாள் கோவில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார உலா வருகிறாள்.

    தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை.

    தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ஏழை & பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வரிசையில் வரவைத்து அனைவரையும் சமமாக அமர

    • அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா.
    • மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம் அது.

    ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாகவும் உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

    கோவிந்த பாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார்.

    உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர்.

    இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணு அவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர்.

    இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர்.

    கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

    அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார்.

    தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும்போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும்.

    தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார்.

    அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான்.

    கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார்.

    அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள்.

    ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது. அப்படி திரும்பினால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார்.

    ஆதிசங்கரரும் அதை ஏற்று அம்பாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார்.

    மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார்.

    திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்த இடத்திலேயே அம்பாளை பிரதிஷ்டை செய்கிறார். அந்த இடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும்.

    ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது.

    அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா.

    மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம் அது.

    பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகமாக காட்சியளிக்கிறாள்.

    • அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.
    • அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார்.

    கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பசுமையான இயற்கை சோலைகள் கொண்ட சிற்றூர் கொல்லூர்.

    இயற்கை எழில் சூழ்ந்த இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம். கொல்லப்புறா என்ற பெயர் மருவி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.

    கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான்.

    தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகின்றனர்.

    இதனால் தலைகனம் அதிகமாகி கம்சாசூரனின் தொல்லைகள் அதிகமாக அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகின்றனர்.

    அவர்களின் பேச்சை செவிமடுத்த சிவபெருமான் பொருத்தருளுங்கள் விடிவு பிறக்கும் என்கிறார்.

    அதன்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் கோலாரிஷியின் ஆலோசனைப்படி ஒன்றினைக்கப்பட்டு மாயசக்தி உருவாக்குகின்றனர்.

    அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழிக்கிறது. அவனை அழித்த இடம் மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது.

    அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.

    அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார்.

    அப்போது சிவனை நோக்கி தவம் செய்யும்போது அவர் முன் வந்து ஆசி வழங்குகிறார்.

    அவர் தங்களை பூஜை செய்ய உருவம் வேண்டும் என்றபோது லிங்க பிரதிஷ்டை செய்யகூறுகிறார்.

    ஆனால் அம்பாளுடன் உடன் இருப்பது போல் பூஜிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

    அவரின் ஆசைப்படி மாயசக்தியான மூகாம்பிகா உருவத்தை அவருக்கு காட்டுகிறார்.

    சிவனும் சக்தியும் அதில் இருப்பதை உணர்ந்து அவ்வுருவத்தை கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார்.

    • தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.
    • பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    வசந்தராஜன் என்ற அரசன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

    அவன் ஒரு நரசிம்மர் கோவிலைக் கட்ட விரும்பினான். வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளை செய்து வந்தான்.

    அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.

    இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான். நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார்.

    அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான்.

    ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.

    அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

    இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான்.

    அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் "பரிக்கல்புரம்" என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.

    மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும்.

    இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார்.

    இந்த கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது.

    முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.

    கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான்.

    இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    கிராமத்தின் நடுவில் இக்கோவில் உள்ளது. ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார்.

    இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலைகளை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.

    சிறந்த வேலை, உயர்ந்த பதவியை அடைய விரும்புகிறவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.

    தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.

    சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள்.

    அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள்.

    மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.

    ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    விழுப்புரம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலை தூரத்தில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

    இந்த புனிதமான இடம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது.

    • மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது.
    • பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது.

    கலியுகத் தொடக்கத்தில் பேய், பிசாசு போன்றவற்றின் தொல்லைகளில் மக்கள் நிம்மதி இழந்தனர்.

    அவர்களிடம் இரக்கம் கொண்ட பிரம்மன், பிரம்ம தீர்த்தக் கரையில் தவம் இருந்தார். அவர் முன்பு நரசிம்மர் தோன்றி "பிரம்மா! உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.

    "மக்கள் நோய் நொடியின்றியும் பேய், பிசாசு தொல்லை இன்றியும் வாழ அருள வேண்டும்" என்று பிரம்மா கேட்டுக் கொண்டார்.

    பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை யாதொரு இடையூறின்றி பண்ண நரசிம்மர் பணிந்தார்.

    ஆஞ்சநேயருக்கு தம் சங்கு, சக்கரங்களை அளித்து எதிரே உள்ள சிறிய மலையிலிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பங்களை, நிறைவேற்றுமாறும் அங்கேயே நித்தியவாசம் புரியமாறும் கட்டளையிட்டார்.

    சப்தரிஷிகளும் வாமதேவர் என்ற முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் இந்த மலையில் வந்து தவம் இருந்தனர்.

    அப்போது கும்போதிர கால்கேயர் எனும் அரக்கர்கள தவத்திற்கு இடையூறு செய்தனர்.

    அப்போது அரக்கர்களால் வரும் இடையூறுகளை அழிப்பதற்கு நரசிம்மர், ஆஞ்சநேயரை இந்த மலைக்கு அனுப்பி வைத்தார்.

    நரசிம்மர் வழங்கிய சங்கு, சக்கரங்களை பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அரக்கர்களின் தலைகளைக் கொய்தார்.

    ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத் தோற்றத்தை மீண்டும் காண்பித்தார் பெருமாள்.

    மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது.

    பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது.

    படியேறி வழிபடும் அளவுக்கு உடல் உரம் இல்லாத முதியவர்கள் கீழிருந்து திருக்கடிலையும் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் மனதில் நினைத்தாலே போதும், மோட்சம் கிட்டும்.

    வருடம் முழுவதும் விழாக்கோலம் கொள்கிறது சோளிங்கர்.

    இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அலை, அலையாக மக்கள் வந்து வணங்கும் சோளிங்கருக்கு நீங்களும் போய் உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.

    • பெருமாள் வலப்புறம் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் விக்ரகம் கண்ணையும் கருத்தையும் கவரும்.
    • கருவறையைச் சுற்றி வரும்போது ஆண்டாள் சன்னதியைக் காணலாம்.

    இது நீள் சதுர வடிவில் உள்ளது. கோவிலின் முன் தேர் ஒன்று எழிலுற நிற்கிறது. கோவிலின் தோரண வாயிலில் பலி பீடம்.

    அதன் அருகே அமைந்த மேடையில் பெருமாள் பாதங்கள் உள்ளன. வலப்புறத்தில் மடைப்பள்ளி.

    அதன் எதிரே அமைந்த மண்டபத்தில் தான் இராபத்து பகல்பத்து விழா நடைபெறும்.

    பெருமாள் சன்னதிக்கு பின் ஆதிகேசவ பெருமாள் சன்னதி உள்ளது. எதிரே பெரிய வடிவில் கல்லில் வடித்த கருடன்.

    கருவறை முன் நின்ற நிலையில் துவார பாலகர்.

    ரங்க மண்டபம் என்னும் மகா மண்டபத்தைக் கடந்ததும் பக்தோசித சன்னதி சடகோபன் என்னும் பெருமாள் திருவடி நிலை ஆதிசேஷன் வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தில் தான்.

    பெருமாள் வலப்புறம் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் விக்ரகம் கண்ணையும் கருத்தையும் கவரும்.

    கருவறையைச் சுற்றி வரும்போது ஆண்டாள் சன்னதியைக் காணலாம்.

    தீர்த்தங்கள்

    பிரம்ம தீர்த்தம், பைரவ கலாவர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன.

    இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும். அகத்தியர் முதலிய பெரிய மகான்கள் நீராடிய புண்ணிய தீர்த்தங்கள் இவை.

    • பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும்.
    • புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

    ஒருநாள் தங்கி இருந்தாலே மோட்சம் தரக்கூடியது கடிகாசலம் என பெயர் கொண்டு விளங்கும் சோளிங்கர் திருத்தலம்.

    பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆசாரியார்களில் ஸ்ரீமந்தநாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராமானுஜம், மணவாள மாமுனி போன்றோர் மங்களா சாசனம் செய்த பெருமையும் பெற்ற ஸ்தலம் இது.

    அமைவிடம்

    சென்னை & பெங்களூர் ரெயில் வழியில் அரக்கோணத்தில் இருந்து மேற்கே 27 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னை & திருப்பதி ரெயில் மார்க்கத்தில் திருத்தணியில் இருந்து 27 கிலோ மீட்டர் மேற்கிலும் அமைந்துள்ளது.

    வேலூரில் இருந்தும் சித்தூரில் இருந்தும் பஸ் வசதிகள் அதிகம்.

    மலை அளவு

    சோளிங்கர் என்று அழைக்கப்பட்டாலும் இதன் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கொடைபாளையம் என்கிற சிறு கிராமத்தில் தான் பெரியமலையும் சிறிய மலையும் அமைந்துள்ளது.

    பெரிய மலையில் யோக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.

    மலையின் நீளம் 200 அடி. அகலம் 150 அடி. உயரம் 750 அடி. கோவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. நீளம் 150 அடி. அகலம் 250 அடி. உயரம் 250 அடி. மொத்தம் 406 படிக்கட்டுகள். பரப்பளவு 1 ஏக்கர்.

    ஊர் திருக்கோவில் அமைந்துள்ள இடத்தின் நீளம் 300 அடி, அகலம் 150 அடி.

    பரப்பளவு இரண்டரை ஏக்கர், யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ பெருமாள் கோவில் சோளிங்கர் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

    முதன் முதலில் பெருமாள் கோவிலின் பிரதிஷ்டை காலம் கி.பி. 1588.

    தலச் சிறப்பு

    பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும்.

    புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

    ஊர் பெருமாள் கோவிலில் பாரிஜாத மரம் ஒன்றும் முன்பு இருந்தது, சிறிய மலையில் அசோக மரம் உள்ளது.

    அதன் கீழே குளம் அமைந்துள்ளது. பெரிய மலையில் உள்ளே நுழையும் போது அழகிய கோபுரம் நம் விழிகளை அகல விரிக்க வைக்கும்.

    • மலை சுற்றுவதை பாதி வழியில் இருந்து தொடங்கவோ, பாதி வழியில் முடிக்கவோ கூடாது.
    • மிக வேகமாக கிரிவலம் வருதல் கூடாது. மெதுவாக சாதாரணமாக நடக்க வேண்டும்.

    மலையே இறைவனாக அமைந்து உள்ளதால் மலையைச்சுற்றும் பக்தர்கள் சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

    கிரிவலம் செல்லும் தினத்தில் குளித்து விட்டு நெற்றியில் திருநீறு அணிந்து செல்ல வேண்டும்.

    சிவனின் நாமத்தையோ அல்லது பக்திப் பாடல்களையோ பாடிக் கொண்டே செல்ல வேண்டும்.

    மிதியடி அணிந்து மலை சுற்றக் கூடாது. வெயில், மழைக்கு குடையை பயன்படுத்தக் கூடாது.

    மலை சுற்ற வாகன துணையை நாடக் கூடாது.

    இடமிருந்து வலமாக மட்டுமே மலை வலம்வர வேண்டும்.

    கோபம் முதலான உணர்ச்சி நிலைகளை மலைச்சுற்றும் போது தவிர்த்தல் வேண்டும்.

    அருணாசலலேஸ்வரர் கோவிலின் கிழக்கு வாசலுக்கு வெளியில் இருந்து மலை சுற்று தொடங்க வேண்டும்.

    எந்த இடத்தில் தொடங்கினோமோ அந்த இடத்தில் முடிக்க வேண்டும்.

    கிரிவலப்பாதையில் செங்கம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே நந்திகேசுவரர் சன்னதி உண்டு.

    கிரிவலம் செல்வோர் இந்த சன்னதிக்கு கட்டாயம் சென்று வணங்குவது சிறப்பாகும்.

    இறைவன் அனுப்பிய அதிகாரமூர்த்தியாக அங்கிருந்து பக்தர்களுக்கு உதவுகிறார்.

    மலை சுற்றுவதை பாதி வழியில் இருந்து தொடங்கவோ, பாதி வழியில் முடிக்கவோ கூடாது.

    மிக வேகமாக கிரிவலம் வருதல் கூடாது. மெதுவாக சாதாரணமாக நடக்க வேண்டும்.

    வழியில் பல மூலிகைகள் உள்ளதால் மூலிகை காற்றும் நம் மீது பட வேண்டும்.

    அதனை முகர்ந்து கொண்டு செல்வது சிறப்பாகும். மலை சுற்றுவதை ஒரு தியானத்தை போல நிதானமாக மேற்கொள்ள வேண்டும்.

    இடது ஒரமாகவே நடந்து செல்ல வேண்டும். தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், மறைந்த ஞானிகளும் அருவமாக மலை சுற்றுவதால் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இடது ஒரமாக நாம் மலை சுற்றுதல் வேண்டும்.

    பேசிக் கொண்டு வராமல் தேவ நாமத்தை சொல்லிக்கொண்டு வருதல் நலம்.

    அண்ணாமலையாருக்கு அரோகரா என்று இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு செல்லலாம்.

    முக்கியமாக மலை சுற்றுவோர், வழியில் எங்கும் உட்கார்ந்து ஒய்வெடுத்தல் கூடாது, இதை தவிர்க்க வேண்டும்.

    வழியில் உள்ள சன்னதிகள், லிங்கங்கள் ஆகியவற்றை வணங்க வேண்டும்.

    அடிக்கடி மலையை பார்த்தவாறு வணங்கி செல்வது சிறப்பாகும்.

    முக்கிய இடங்களில் மலையை நோக்கி கீழே விழுந்து நமஸ்காரம் செய்வது மிகவும் சிறப்பு.

    மலை சுற்றுவோர் அதனை முடிக்கும் போது ஈசானியம் வழியாகத்தான் வந்து முடிக்க வேண்டும்.

    மலை சுற்றி முடிந்ததும் அருணாசலேஸ்வரரை வணங்கிய பின்னரே திரும்புதல் வேண்டும்.

    மலை சுற்றி முடித்தவுடன் தூங்கக் கூடாது. குளிக்கவும் கூடாது.

    குறிப்பாக தன்னந்தனியாக மலை சுற்றுவது மிகவும் நல்லது. ஏனெனில் அது மவுனத்தை ஏற்படுத்தும்.

    தெய்வீக தரிசனம் சிதையாது செல்வதற்கு உதவும். ஒருமித்த சிந்தனையை உண்டாக்கும்.

    மலைவலம் சென்று சிவனின் அருளை பெறுவோம்.

    ×