என் மலர்
புதுச்சேரி

கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்பின்கோ ஊழியர்கள்.
கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முற்றுகை
- புதுவை கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆலை நிலம் விற்பனை மோசடி குறித்து மேலாண் இயக்குனரிடம் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டக்குழு தலைவர்கள் சிவசங்கரன், மஞ்சினி, எல்லப்பன் தலைமை வகித்தனர். நடராஜன், ரஞ்சித், முருகன், பூபாலன், துரைலிங்கம், இளங்கோ முன்னிலை வகித்தனர். 10 மாதமாக மூடிக்கிடக்கும் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய வேண்டும்.
ஆலை நிலம் விற்பனை மோசடி குறித்து மேலாண் இயக்குனரிடம் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். உற்பத்தி செய்த நூலை காலத்தோடு விற்காமல் காலம்கடத்தி குறைந்த விலைக்கு விற்ற மேலாண் இயக்குனர் மீது விசாரணை நடத்த வேண்டும்.
மன உளைச்சலால் மரணமடைந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நட ந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நுழைவு வாயிலை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.






