search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்போனில் விளையாட நெட் வசதி இல்லாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
    X

    செல்போனில் விளையாட நெட் வசதி இல்லாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
    • அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    பாகூர்:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் புதுவையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் துப்புரவளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார்.

    இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (12) 2 மகன்கள். கமலேஷ் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான்.

    இவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ப்ரீ பையர் எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவும் கமலேஷ் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இன்று காலை செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்காக தனது தாய் பச்சை வள்ளியிடம் பணம் கேட்டான். அதற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் தருவதாக கமலேஷிடம் கூறிவிட்டு பச்சையம்மாள் வேலைக்கு சென்று விட்டார்.

    விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்தும் செல்போனில் விளையாட முடியாத வேதனையில் இருந்த கமலேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பச்சைவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பச்சைவள்ளி பதறி அடித்து கொண்டு வீட்டு வந்தார். அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் விளையாடுவதற்கு ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×