என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு
- ஓய்வூதியம் கிடைக்க ரூ.30 கோடியே 95 லட்சத்து 58 ஆயிரம் செலவின ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது.
- பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிணை தொடங்கி வைத்து, காசோலையை அதிகாரிகளிடம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதிதாக விண்ணப்பித்துள்ள மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
மீனவர் நலத்துறையில் ஓய்வூதியம் கேட்டு புதிதாக விண்ணப்பித்த 1,0 96 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிணை தொடங்கி வைத்து, காசோலையை அதிகாரிகளிடம் வழங்கினார்.
இந்த ஓய்வூதிய தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,086 மீனவ முதியோர் உட்பட மொத்தம் 9 ஆயிரத்து 202 பேருக்கு தடையின்றி ஓராண்டு ஓய்வூதியம் கிடைக்க ரூ.30 கோடியே 95 லட்சத்து 58 ஆயிரம் செலவின ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது.
இதனால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி கிடைக்கும். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், செந்தில்குமார், பிரகாஷ்குமார், மீன்வளத்துறை செயலர் வல்லவன், இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






