search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் தேங்காமல் அகற்ற வேண்டும்
    X

    கோப்பு படம்.

    குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் தேங்காமல் அகற்ற வேண்டும்

    • அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
    • சேதமடைந்த மின்கம்பி, மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின் இணைப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு மியான்மர் நாடு மிக்ஜம் என்று பெயர் வைத்துள்ளது.

    இந்த புயல் தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும் –மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் கரையை கடக்கும் போது சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    கரையை கடக்கும் முன் தமிழகம் மற்றும் புதுவையில் கடுமையான மழை பெய்யும் என்றும் எச்சரிச்கை விடப்பட்டுள்ளது. புயல், மழை எச்சரிக்கை காரணமாக புதுவையில் அரசு, பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளது.

    புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 211 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவை வந்துள்ளனர். அதில் ஒரு குழு காரைக்காலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மற்றொரு குழுவினர் புதுவை கோரிமேட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முதல் 3 நாள் பணியில் ஈடுபட உள்ளனர். அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    பணியில் ஈடுபடக் கூடிய அரசுத் துறை ஊழியர்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    12 அரசு துறை கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், நேற்று இரவு முதல் புதுவையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. அதிக அளவில் காற்று வீசியது.இன்று அதிகாலை முதல் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

    புயலை எதிர்கொள்ள ஏற்கனவே தலைமை செயலர் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து பேசியதாவது:-

    மோட்டார் மூலம் வெளியேற்றம்

    தாழ்வான குடியிருப்பு பகுதிகள் சாலைகள் தேங்கும் மழை நீரை மோட்டார் மூலம் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். மழை நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த மின்கம்பி, மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின் இணைப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அவசரகால மையம், கட்டுப்பாட்டு அறைகள் 24 மணிநேரமும் இயங்க வேண்டும்.

    வீடுர், சாத்தனூர் அணை திறப்பால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும், கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பியதை மீன்வளத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனிடையே, புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த கூண்டு எடுத்துக் காட்டுகிறது.

    புதுவை தேங்காய் திட்டு மீன் பிடி துறைமுகத்தில் முதலியார்பேட்டை போலீசார் மைக் மூலம் கரையோர பகுதியில் கட்டுமரத்தில் மீன் பிடித்த மீனவர்களை கரைக்கு வருமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×