என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
விரக்தியில் தவறான கருத்துகளை நாராயணசாமி பரப்புகிறார்-அன்பழகன் அறிக்கை
- ஒரு திட்டத்தின் அறிவிப்பு செயல் வடிவம் பெற குறைந்தது 3 மாத காலமாவது ஆகும். அதுவரை தாக்குப் பிடிக்க முடியாமல் நாராயணசாமி இந்த திட்டத்துக்கு ஏது பணம், எங்கிருந்து வரும்?
- முதல்-அமைச்சரை பார்த்து சின்ன மோடி என்று சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கு நன்மை பயக்கும் கியாஸ் மானியம், குடும்ப தலைவிக்கு மானியம், மாதாந்திர நிதி உதவி போன்ற திட்டங்களின் பயன் மக்களை சென்றடைய கூடாது என்கின்ற தனிமனித விரக்தியில் தவறான கருத்துக்களை நாராயணசாமி பரப்புகிறார்.
ஒரு திட்டத்தின் அறிவிப்பு செயல் வடிவம் பெற குறைந்தது 3 மாத காலமாவது ஆகும். அதுவரை தாக்குப் பிடிக்க முடியாமல் நாராயணசாமி இந்த திட்டத்துக்கு ஏது பணம், எங்கிருந்து வரும்? எப்படி வரும்? என ஒன்றும் புரியாதவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி செயலர், தலைமைச் செயலாளர், கவர்னர் ஆகியோருடைய அனுமதி பெற்று தான் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு புரியாமல் இருப்பது நகைப்பாக உள்ளது.
முதல்-அமைச்சரை பார்த்து சின்ன மோடி என்று சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான். கடந்த ஆட்சியின் போது கவர்னருக்கு எதிராக ஒரு வாரத்துக்கு மேலாக வீதியில் அமர்ந்து பகோடாவும், மீன், எறா பஜ்ஜியும் சுட்டவருக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது போல் உள்ளது.
முதல்-அமைச்சராக இருந்த போது அப்போதைய பெண் கவர்னருக்கு எதிராக வீதியில் அமர்ந்து கொண்டு பஜ்ஜி சுட்டவருக்கு வேறு எதைப்பற்றி உதாரணமாக சொல்ல முடியும். அரசியல் விமர்சனங்கள் என்பது உயரிய பண்புள்ளதாக இருக்க வேண்டும். அதை புரிந்து நடப்பது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு அழகாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






