search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு- சிதம்பரம் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
    X

    புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு- சிதம்பரம் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

    • புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சாலையோரம், கடை வீதிகள், பூங்கா மற்றும் வீடு அருகே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன. அதிலும் குறி வைத்து புத்தம் புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.

    இந்தநிலையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பிடிபட்டவர்கள் சிதம்பரம் கே.என்.தோட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 19), உசுப்பூர் நாயகபுரம் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற தமிழரசன் (19) என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இவர்களில் தமிழரசன் சிதம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் புதுவையில் மேலும் 8 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்தது உள்பட மொத்தம் 9 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×