search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கருணாநிதிக்கு மணிமண்டபம்-கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    கருணாநிதிக்கு மணிமண்டபம்-கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை

    • 12 ஆண்டுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள். வெறும் இலவச அறிவிப்புகளால் மாநிலத்தை வழிநடத்தி செல்ல இயலாது.
    • பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை தேவை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    12 ஆண்டுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள். வெறும் இலவச அறிவிப்புகளால் மாநிலத்தை வழிநடத்தி செல்ல இயலாது.

    இந்த பட்ஜெட் வரியில்லா பட்ஜெட் என கூறினாலும், மின்சார வரி , மதுபான வரி, வீட்டு வரி என மறைமுக வரி விதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. புதுவை மாநிலம் வாங்கிய ரூ.10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய ஏன் மறுக்கிறது?

    பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை தேவை. இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வழி காணவேண்டும். போக்குவரத்து முனையத்தில் அரசு கையகப்படுத்திய 56 ஏக்கர் நிலத்தில் உடனடியாக மென் பொருள் பூங்கா அமைத்து இளைஞர் சக்தியினை பயன்படுத்தி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    1990-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை போல புதுவையிலும் தமிழ்வளர்ச்சித் துறை உருவாக்க வேண்டும். புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க நடந்த முயற்சியினை தடுத்தவர் கருணாநிதி. அவருக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதே போல் இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த சுகுமார், வெங்கடேசன் நினைவினைப் போற்றும் வகையில் அரசு கட்டிடங்களுக்கு பெயர் வைக்க வேண்டும். மொத்தத்தில் இது மக்களுக்கு வரியில்லா பட்ஜெட் இல்லை, சரியில்லா பட்ஜெட்டாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×