என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ரங்கசாமி ஆட்சியில் புதுவையில் கலாசார சீரழிவு- நாராயணசாமி
- 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தலித் சமுகத்தை சேர்ந்த மல்லிகார்ஜீன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டது பெருமையாகும்.
- தெலுங்கான கவர்னராக உள்ள தமிழிசை அங்கு மக்கள் குறைகளை கேட்டதாக கூறுகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தலித் சமுகத்தை சேர்ந்த மல்லிகார்ஜீன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டது பெருமையாகும்.
காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைப்பது, பா.ஜனதா சவால்களை சந்திப்பது போன்ற 2 சவால்கள் அவர் முன்னே உள்ளது. அவருடைய திறமை, கட்சி பற்று ஆகியவை மூலம் சிறந்த காங்கிரஸ் தலைவராக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தெலுங்கான கவர்னராக உள்ள தமிழிசை அங்கு மக்கள் குறைகளை கேட்டதாக கூறுகிறார். இது சம்மந்தமாக ஐதராபாத் அரசியல் கட்சியினர் மற்றும் அங்குள்ள பத்திரிக்கையாளர்களை கேட்டபோது அவர் தெலுங்கானா கவர்னராக வந்த பிறகு அப்படிப்பட்ட எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என தெளிவாக கூறியுள்ளனர்.
நான் அவருக்கு ஒரு சாவல் விடுகிறேன். இப்போது தெலுங்கானாவில் பொதுமக்கள் குறைகளை கேட்கப் போகிறேன் என கூறுவாரா? பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்ததில் எந்த பிரச்சினையாவது தீர்த்து வைத்துள்ளாரா? அங்கு அவர் இப்படி செயல்பட முடியாது. தெலுங்கானா சமீதி பொறுப்பாளர்கள் எதிர்த்து போராடுவார்கள்.
அவரவர் அவர்களது அதிகார எல்லைக்குள் செயல்பட வேண்டும். தெலுங்கானாவின் முழுநேர கவர்னரான தமிழிசை ஏன் புதுவையிலேயே தங்கி உள்ளார்? அங்கு ஏன் செல்வதில்லை? தெலுங்கானாவில் மாநில அரசு விழாக்களில் அவருக்கு அழைப்பு வருவதில்லை. மத்திய அரசு விழாக்களில் மட்டுமே பங்கேற்கிறார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் பாப்ஸ்கோ அங்காடி செயல்படுகிறது. புதுவையில் மானிய தொகுப்பு பைகளை வாங்க 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? பால் பவுடரில் தண்ணீர் கலந்து பால் விற்பனை நடைபெறுகிறது.
தமிழகத்தை போல புதுவையிலும் கவர்னரிடம் ஒப்புதல் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். புதுவையில் புது கலாச்சாரமாக பப் ஆரம்பித்துள்ளது. இதில் போதை பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுவை கலாச்சாரம் ரங்கசாமி ஆட்சியில் சீரழிந்து வருகிறது. பப் அருகில் வசிப்பவர்கள், அதிக சத்தம், மது போதையில் வருபவர்களால் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
மத்திய அரசு புதுவை அரசுக்கு நிதி கொடுத்திருந்தால் அதனை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டியதுதானே? ஏன் மூடு மந்திரமாக வைத்துள்ளார்கள். சபாநாயகர் தற்போது 3-வது சூப்பர் சி.எம். ஆக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.






