என் மலர்
புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய காட்சி.
கம்யூனிஸ்டு நூதன போராட்டம்
- புதுவை அரசு உள்ளாட்சித் துறையின் கீழ் வில்லியனூர் கொம்யூன் பராமரிப்பில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் இயங்கி வந்தது.
- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு உள்ளாட்சித் துறையின் கீழ் வில்லியனூர் கொம்யூன் பராமரிப்பில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் இயங்கி வந்தது.
தற்போது இந்த மண்டபம் கடந்த 15 ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. குறைந்த வாடகையில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த இந்த மண்டபத்தை புனரமைப்பு செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இந்த கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என வில்லியனூர் கொம்யூன் நிர்வாகம் அதனை மூடிவிட்டது.
ஆனால் அங்கு ஒரு சில அரசு சார்ந்த அலுவலகப் பணிகள் மட்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வில்லியனூர், ஊசுடு, மங்கலம் தொகுதி குழு சார்பில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபத்தை புனரமைப்பு செய்ய வலியுறுத்தி தொகுதி செயலாளர் பெஞ்சமின் தலைமையில் மலர் வளையம் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி துணை செயலாளர் பெருமாள், தொகுதி பொருளாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். பின்னர் அங்கிருந்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.
பேரணியை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி தொடங்கி வைத்தார். இதில் மாநில குழு உறுப்பினர் அந்துவான், மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் வில்லியனூர் ஆணையர் ஆறுமுகத்திடம், கஸ்தூரிபாய் காந்தி மண்டபத்தை உடனடியாக புனரமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும்படி கேட்டுக் கொண்டனர். இதற்கு பதில் அளித்த ஆணையர் ஆறுமுகம், இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு அரசு முடிவு செய்து விட்டதாகவும். விரைவில் புதிய கட்டிடம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்துப் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கணேசன், பாலதண்டாயுதம், ராஜலட்சுமி, பாத்திமா, நாசர், சரவணன், கண்ணன், செல்வம், சிவபெருமான், தில்லைநாயகம், சுரேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






