search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிபோதையில் தகராறு செய்ததை தாய் கண்டித்ததால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    குடிபோதையில் தகராறு செய்ததை தாய் கண்டித்ததால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.
    • மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராம லிங்கம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும் சரவணன் (35) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. ராமலிங்கமும் அவரது மகன் சரவணனும் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்ததால் ஜெயலட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே ராமலிங்க மும் அவரது மகனும் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். மேலும் சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சரவணன் மது குடித்து விட்டு வீட்டில் அவரது தாயாரிடம் தகராறு செய்தார். அப்போது ஜெயலட்சுமி காலையில் திருமணத்துக்கு செல்ல உள்ளதால் தூங்குமாறு சரவணனை அறிவுறுத்தினார்.

    அதற்கு சரவணன் நீ எப்படி திருமணத்துக்கு செல்வாய் என பார்த்துக்கொள்கிறேன் என கூறி ஜெயலட்சுமியை படுக்கை அறைக்கு உள்ளே தள்ளி வெளிபுறமாக பூட்டி விட்டார்.

    காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாத தால் ஜெயலட்சுமி ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டினரை அழைத்தார்.

    அப்போது அவர்கள் வீட்டின் முன் பக்க கதவை திறந்து உள்ளே வந்த போது வீட்டின் வரண்டாவில் உள்ள மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×