என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி
- வீட்டில் தனியாக இருந்த துணை தாசில்தார் தாயாரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வாணரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அவருடன் ஒருவர் அடிக்கடி அம்சாவிடம் உணவு யாசகம் பெற்று சாப்பிட்டு வந்தனர்.
புதுச்சேரி:
வீட்டில் தனியாக இருந்த துணை தாசில்தார் தாயாரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அம்சா(வயது67). இவர்களுக்கு கணேசன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கணேசன் ஏனாமில் துணை தாசில்தாரராக பணிபுரிந்து வருகிறார்.
குப்புசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அம்சா தனது மகள் விஜய லட்சுமியுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வாணரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அவருடன் ஒருவர் அடிக்கடி அம்சாவிடம் உணவு யாசகம் பெற்று சாப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமி வெளியே சென்றிருந்தார். வீட்டில் அம்சா மட்டும் தனியாக இருந்தார். அப்போது இதனை நோட்டமிட்ட குடி போதையில் அம்சாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர்.
அம்சா வீட்டுக்குள் தண்ணீர் எடுத்து வர சென்ற போது பின் தொடர்ந்து சென்ற அந்த நபர்கள் அம்சா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா அலறல் சத்தம் போட்டார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அம்சாவை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அம்சா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தாக்கி நகையை பறிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.






