என் மலர்
புதுச்சேரி

யாகசாலை பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்ற காட்சி.
அகோர வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம்
- கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது.
- ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்
புதுச்சேரி:
வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சாமி கோவில் உள்ளது.
இங்குள்ள பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கை அம்மன், காளிகாம்பாள் சமேத அகோர வீரபத்திரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பராமச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நடந்த 2-ம் கால யாக பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்றார். மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
நாளை காலை 6.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம்புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி உமாபதி, திருப்பணிக்குழு தலைவர் ராமதாஸ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார், திருப்பணிக்குழு, கிராமவாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.