என் மலர்
புதுச்சேரி

டேங்கர் லாரி பின்புறத்தில் மோதியதில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சென்ற கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.
கார் மீது லாரி மோதி மீது விபத்து
- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
- மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் புதுவையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் துரைப்பாக்கம் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி ஒன்று மல்லாடி கிருஷ்ணா ராவ் காரின் மீது மோதியது.
இதில் நின்று கொண்டிருந்த கார், அதற்கு முன்னால் நின்றிருந்த மற்றொரு லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் முன்னால் நின்ற லாரியின் அடிப்பாகத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தது.
காரின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்தன. இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உயிர் தப்பினார். அவரது பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார், மற்றும் டிரைவர் ஆகியோரும் உயிர் தப்பினர்.
பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் உடனடியாக காரில் இறங்கி தப்பியோட முயன்ற லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தார். அவர் மதுபோதையில் லாரியை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கிண்டி போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் பல்லாவரத்தை சேர்ந்தவர் என்பதும், மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் சேதமடைந்ததால் முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆட்டோவில் ஏறி மீனம் பாக்கம் விமான நிலையம் சென்று விமானத்தில் ஐதராபாத் சென்றார்.






