என் மலர்
புதுச்சேரி

நேரு வீதி வணிகத் திருவிழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தபோது எடுத்தபடம்.
நேரு வீதியில் வணிகத் திருவிழா-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- புதுவை நேரு வீதியில் நடைபெறும் வணிகத் திருவிழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
- நேரு வீதியில் வியாபாரத்தை ஈர்க்கும் வகையில் வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில் நடைபெறும் வணிகத் திருவிழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுவையில் நேருவீதி வணிகர்கள் சங்கம் சார்பில் வணிகத் திருவிழா-2023 தொடங்கியது. இதன் தொடக்க விழா ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு வணிகத் திருவிழாவை ரிப்பன் வெட்டியும், பரிசுக் கூப்பன்களை வெளியிட்டும் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நேரு வீதியில் வியாபாரத்தை ஈர்க்கும் வகையில் வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட புதுவையில் எவ்வளவு மக்கள் குவிந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு காரணம் புதுவை யின் மீதுள்ள ஈர்ப்புதான்.
வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.
வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில் வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது.சுற்றுலா துறை சார்பில் புதுவை மாநிலம் முழுவதும் வணிகத் திருவிழா விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அப்போது தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நேரு வீதி வணிகர் சங்க தலைவர் நமச்சிவாயம், துணை தலைவர்கள் இசைகலைவன், நடராஜன், கணேசன், செயல் துணை தலைவர் குகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பழனி அடைக்கலம், இணை செயலாளர்கள் வெங்கடேஷ், செல்வகணபதி, மகேஷ், செல்வக்குமார், இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வணிகத் திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் நேரு வீதி கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும்.






