search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை தடுப்பு கட்டையில் பஸ் மோதியதில் 8 பேர் படுகாயம்
    X

    சாலை தடுப்பு கட்டையில் மோதி நின்ற தமிழக அரசு சொகுசு பஸ்.

    சாலை தடுப்பு கட்டையில் பஸ் மோதியதில் 8 பேர் படுகாயம்

    • தமிழக அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது.
    • கண்டக்டராக மேகநாதன் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பஸ்சை அரியலூரைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக மேகநாதன் இருந்து வந்தார்.

    புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை தடுப்பு கட்டையில் அதிவேகமாக மோதியது. இதில் டிரைவரின் அருகில் அமர்ந்து வந்த கண்டக்டர் மேகநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பஸ்சில் இருந்த பயணிகளும் இடிபாடுகளில் சிக்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    பின்னர் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்தில் காயமடைந்த பஸ் டிரைவர் ராஜராஜன், கண்டக்டர் மேகநாதன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தினகர், மயிலாடு துறை இளையராஜா, சீர்காழி ஜெயராஜ், நாகப்பட்டினம் முத்தரசன், பாபநாசம் சவுமியா, ரகுநாத் உள்ளிட்ட 8 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பஸ்சை ஓட்டி வந்த ராஜராஜன் புதுச்சேரி எல்லையான காலாப்பட்டு பகுதியை கடந்த போது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றதால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையின் தடுப்பு கட்டையில் மோதியது தெரியவந்தது.

    விபத்தில் பஸ்சின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்ததால் கிரேன் மூலம் பஸ்சை போலீசார் அப்புறபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×