என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபாலீஸ்வரர் கோவில்
    X
    கபாலீஸ்வரர் கோவில்

    அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இன்று மூடப்பட்டன

    சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் நாளை தேவாலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு வருகிற 23-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    அதன் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பல முக்கிய கோவில்கள் மூடப்பட்டன. ஏற்கனவே தென் மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தேவாலங்கள் மூடப்பட்டுள்ளன.

    கூட்டம் அதிகம் இல்லாத சிறிய கோவில்கள் மட்டும் திறந்து இருந்தன. சென்னை உட்பட வட மாவட்டங்களில் கோவில்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டு இருந்தன.

    மாங்காடு கோவில், திருத்தணி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கோவில்கள் தரிசனம் நடைபெற்று வந்தது.

    தற்போது அரசு அறிவித்த வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றும் வகையில் கோவில்கள் மூடப்படுகின்றன. மயிலாப்பூர் சாய்பாபா கோவில் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சன்னதிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் வெளியில் நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டப்படி சென்றனர். பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் இன்றும், நாளையும் தரிசனம் கிடையாது என அறிவித்து கோவிலை மூடிவிட்டனர்.

    திங்கள் கிழமை தான் தரிசனத்திற்கு அனுமதி என்று அறிவித்துள்ளனர். மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில், முண்டகக்கண்ணியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சன்ன திக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டம் அதிகம் சேரும் கோவில்களை மூட வேண்டும் என்று அரசு அறிவித்ததையொட்டி கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் நாளை தேவாலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வழிபாடுகளை காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் பல இடங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களும் நாளை மூடப்பட்டு இருக்கும் என்று சென்னை மயிலை மறைமாவட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மூடப்பட்டு இருக்கும் கோவில்கள், தேவாலயங்களுக்கு வரும் மக்கள் வாசலில் நின்று சாமிதரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    Next Story
    ×