search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 28-ந்தேதி தொடக்கம்: 8-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 28-ந்தேதி தொடக்கம்: 8-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 8-ந்தேதி நடக்கிறது.
    பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகிய சிறப்புகளை உடையது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. மறுநாள் 29-ந்தேதி பகல் பத்து திருமொழி திருவிழா தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் நாலாயிர திவ்ய பிரபந்தமானது பகல் பத்து மற்றும் ராப்பத்து என இருபது நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும்.அதற்காக ஸ்ரீரங்க நாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்க ஆரம்பித்த உடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து தெய்வப்பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்ய பிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை.

    இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்ரி மண்டபத்தில் வருகிற 28-ந்தேதி இரவு 7மணிக்கு தொடங்குகிறது இதில் அரையர்கள், பட்டாச் சாரியார்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். அன்றைய தினம் மாலை 4-30மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

    திருமங்கை மன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை ஒரு கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன் பாடினார். அதனை கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

    இவ்வாறு நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாத முனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழி பாடல்களையும் மற்றைய ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல் பத்து உற்சவம் எனப்பெயரிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பகல் பத்து உற்சவம் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

    இதன்தொடர்ச்சியாக பகல் பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான வருகிற ஜனவரி 7-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

    மறுநாள் 8-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான ஜனவரி 8-ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 14-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவை, 15-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 17-ந்தேதி தீர்த்தவாரி, 18-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்று மறை நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெய ராமன் மற்றும் அறங் காவலர்கள் செய்து வரு கின்றனர்.

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக உபயதாரர்கள் வழங்கிய ரூ.40 லட்சம் நிதியில் 64 இடங்களில் புதிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 102 கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக வடக்குவாசல் கோபுரம், கிழக்கு வாசல் கோபுரம், ரங்கா, ரங்கா கோபுரம் மற்றும் ரங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதி உள்பட 64 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வரு கின்றன.

    கேமரா பதிவுகளை கண்காணிக்க கோவில் இணை ஆணையர் அறை, இணை ஆணையர் அலுவலகம் மற்றும் போலீஸ் புறக்காவல் நிலையம் ஆகிய 3இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×