search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

    மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.

    நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளைமறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். நடப்பு சீசனை முன்னிட்டு அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நாளை கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

    தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உண்ணிகிருஷ்ணன், மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனுகுமார் ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இரு மேல்சாந்திகளையும், படியிறங்கும் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார்.

    6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக் கொள்வார்கள்.

    அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்படும்.

    நாளைமறுநாள் அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    பக்தர்களின் வருகை அதிகமானால் தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

    ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு 50 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் பம்பை, சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 3½ லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1½ லட்சம் லிட்டர் சுக்கு வெள்ளமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சீசனை முன்னிட்டு, மேம்பாட்டு பணிகளுக்காக கேரள அரசு சார்பில் 150 கோடி செலவில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து கடந்த ஆண்டை விட கூடுதலாக 2,000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.

    கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து உள்ளனர். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்தும் முதல் கட்டமாக 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டும், மாநில தலைநகரமான திருவனந்தபுரம், மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும், அதேபோல் பஸ்களின் நெருக்கடியினை தடுக்க நிலக்கல் வாகன பார்க்கிங் பகுதியில் இருந்து கேரள அரசின் சிறப்பு தொடர் பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்து கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜமாணிக்கம் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×