search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கல் கோவிலில் நெடுங்கன்னி அம்மனிடம் முருகன் வேல் வாங்கினார் இன்று மாலை சூரசம்ஹாரம்
    X

    சிக்கல் கோவிலில் நெடுங்கன்னி அம்மனிடம் முருகன் வேல் வாங்கினார் இன்று மாலை சூரசம்ஹாரம்

    சிக்கல் கோவிலில் நெடுங்கன்னி அம்மனிடம் முருகன் வேல் வாங்கினார் இன்று மாலை சூரசம்ஹாரம்
    நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

    இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு பெற்ற ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் முருகன் சிங்காரவேலவர், வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் முக்கிய நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முன்னதாக காலையில் தேரில் அலங்கார கோலத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு சிங்காரவேலவர் தேரில் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து காலை 7.30 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரை நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து சக்திவேல் வாங்குதல், முருகனுக்கு வியர்வை சிந்தும் காட்சி மற்றும் வேல்நெடுங்கன்னி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

    இன்று சண்முகார்ச்சனை, செய்யும் நிகழ்ச்சியும் சிங்காரவேலவர் தங்க ஆட்டு கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடக்கிறது. 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்க குதிரை வாகனத்தில் பவனி, தெய்வானை திருக்கல்யாணம், முருகன் வெள்ளி ரதத்தில் வீதி உலாவும், 7-ந் தேதி வள்ளி திருக்கல்யாணம் நடக்கின்றன. 8-ந்தேதி விடையாற்றி உற்சவமும், சயன அலங்காரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், ஆய்வாளர் பழனித்துரை, நிர்வாக அதிகாரி ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×