என் மலர்
செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் கற்கள் வைத்து வழிபாடு: வீடு கட்ட வரம் வேண்டி குவியும் பக்தர்கள்
சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில் மிக தொன்மையானது வரலாற்று சிறப்பு மிக்க கோவில் இங்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாரம் தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
முருக பக்தர்கள் பலர் வேண்டும் வைத்து தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமை என கணக்கு வைத்து வருகிறவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. குறிப்பாக சென்னிமலை முருகனிடம் குழந்தை வரம் வேண்டியும், திருமண பாக்கியம் வேண்டியும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
இப்படி பக்தர்களின் எண்ணிக்கை கூடி வரும் நிலையில் சமீப காலமாக புதுவகையான வழிபாடும் ஏற்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை சன்னதி செல்லும் வழியில் படியின் இரு புறங்களிலும் அங்கு கிடக்கும் கற்களை எடுத்து சிறிய அளவில் குன்று போல் வைத்து வழிபட்டு செல்கின்றனர். அப்படி செய்தால் புது வீடு கட்டும் யோகம் வரும் எனவும் வீடு கட்டும் பணி, தங்கு தடையின்றி நடக்கும் என்பது ஜதீகம் ஆகி தற்போது இந்த புது வகையான விநோத வழிபாடு அதிகரித்து வருகிறது.
இதனால் மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சிறிய சிறிய வேண்டுதல் கற் குவியல் தென்படுகிறது. இதை பார்ப்பவர்களும், மேலும் புதியதாக கோவிலுக்கு வருபவர்களும் இந்த வழிபாடு பற்றி தெரிந்து கொண்டு அவர்களும் சிறிய கற் குவியல் ஏற்படுத்தி வணங்கி செல்கின்றனர்.
இந்த புதுவகை வேண்டுதல் வழிபாடு சமீப காலத்தில் தான் பிரபலமாகி வருகிறது என்கின்றனர் கோவின் அர்ச்சகர்கள். மேலும் சிலர் இந்த வழிபாட்டில் நல்ல பலன் கிடைத்ததாக தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்






