search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி- 20-க்கும் மேற்பட்டோர் காயம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி- 20-க்கும் மேற்பட்டோர் காயம்

    • உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷியா அதிரடி தாக்குதல்
    • உக்ரைன் அதிபர் ரஷிய கொலைக்காரர்களின் தாக்குதல் என கடும் விமர்சனம்

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 475 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரிவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். 20 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோபெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    16 மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் தற்போது இந்த ஊர் சிக்கியுள்ளது. ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது, ஜன்னல்கள் உடைந்தது உள்ளிட்ட படங்களை ஜெலன்ஸ்சி வெளியிட்டுள்ளார். மேலும் பயங்கரவாத ஏவுகணைகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷியாவின் கொலைக்காரர்கள் தொடர்ந்து கட்டிடங்கள், கிராமங்கள் மற்றும் மக்களுக்கு எதிராக போரை தொடர்கின்றனர் எனத் குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றிரவு முழுவதும் பல்வேறு இடங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் முறியடித்துவிட்டதாகவும், சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் கிவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக அறிவித்த நிலையில் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    Next Story
    ×