search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி
    X

    இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி

    • ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வருகிறது.
    • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அந்த வகையில், 8 எம்.பி.கள் வேட்பாளர்களாக களமிறங்கிய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. 3 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற பென்னி மார்டன்ட் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார். வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன.

    இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள 2 லட்சம் உறுப்பினர்களும் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வரும் சூழ்நிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×