என் மலர்
உலகம்

ரஷிய அதிபர் புதினுடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
- உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
- உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞரை அதிபர் ஜெலன்ஸ்கி நீக்கினார்.
Live Updates
- 16 July 2022 5:41 AM IST
ரஷியாவுக்கு எதிரான போரில் அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். எம் 270 எனப்படும் இந்த ராக்கெட் அமைப்பில் இருந்து 40 வினாடிகளில் 12 முறை ராக்கெட்டுகளை ஏவமுடியும். இந்த ஆயுதம் ரஷியாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றும் என உக்ரைன் கருதுகிறது. இங்கிலாந்து இந்த ராக்கெட் அமைப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16 July 2022 2:01 AM IST
ரஷியா ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் ராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களில் 30 சதவீதம் மட்டுமே ராணுவ இலக்குகளை கொண்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தே மற்ற 70 சதவீத தாக்குதல்களை நடத்தி வருகிறது.எனவே ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- 15 July 2022 5:41 PM IST
ரஷியாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது. எனவே, அந்த நிறுவனங்களுக்கு ரஷியா இனி உதிரி பாகங்களை வழங்காது.
இந்த நடவடிக்கையானது பல்கேரியாவை கடுமையாக பாதிக்காது என்றும், உக்ரைனின் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை தடுக்காது என்றும் பல்கேரிய ராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறி உள்ளார். உக்ரைன் ராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
- 15 July 2022 3:56 PM IST
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனுக்கு சொந்தமான இரண்டு மிக்-29 போர் விமானங்களை ரஷிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 15 July 2022 3:55 PM IST
டோனெட்ஸ்கில் பிரிவினைவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டவர் பால் யூரே தடுப்புக்காவலில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 15 July 2022 3:54 PM IST
தூதரக உறவுகளை துண்டித்த உக்ரைனை வட கொரியா கடுமையாக சாடி உள்ளது. பிரிந்து சென்ற இரண்டு பிராந்தியங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதை எதிர்ப்பதற்கு உக்ரைனுக்கு உரிமை இல்லை என்றும், இந்த நடவடிக்கையை இறையாண்மையின் சட்டப்பூர்வ நடவடிக்கை என்றும் வடகொரியா கூறியிருக்கிறது.
- 15 July 2022 5:48 AM IST
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாளுக்கு முன் உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடுகளாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். சிரியா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே இவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தன.
ரஷியாவின் நட்பு நாடான வடகொரியா உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக தற்போது அங்கீகரித்துள்ளது. இதையடுத்து, வடகொரியாவுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்தது.
இந்நிலையில், வடகொரியாவின் இந்த முடிவு உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 15 July 2022 2:31 AM IST
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் 3 ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.
- 14 July 2022 10:08 PM IST
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, உக்ரைனில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, தி ஹேக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இன்று உரையாற்றினார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு தீர்ப்பாயத்தை உருவாக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நீதிமன்றம், ரஷியாவின் உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைமையை தனது வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறிய அவர், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய்வெடுக்க மாட்டோம் என்றார்.
- 14 July 2022 10:01 PM IST
நாட்டிற்கு வெளியே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற ராணுவ நடவடிக்கைகளின் போது, ரஷிய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.
சிறப்பு நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், நிறுவனங்கள் அரசாங்க ஒப்பந்தங்களை மறுக்க முடியாது. தேவைப்பட்டால் ஊழியர்கள் இரவு மற்றும் விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டியிருக்கும்.






