என் மலர்
உலகம்

அமைதி பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா
- போர் நிறுத்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றும் போர் முடிவுக்கு வராத சூழல் தான் நிலவுகிறது. இதனிடையே போர் நிறுத்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பின் போது உக்ரைன் மிகக் குளிரான வெப்பநிலையை அனுபவித்து வரும் சூழலில் இந்த தாக்குதல்கள் நடந்தன. மேலும் இந்த தாக்குதல்களில் இரண்டாம் உலகப் போரின் சின்னமான சோவியத் சகாப்த நினைவுச்சின்னம் சேதமடைந்தது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் அபுதாபியில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக நாளை சந்திக்க இருக்கும் நிலையில், ஒருநாள் முன்னதாகவும் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
"குளிர்காலத்தின் மிகக் குளிரான நாட்களை பயன்படுத்தி மக்களை பயமுறுத்துவது ராஜ தந்திரத்திற்கு திரும்புவதை விட ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமானது" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் தாக்குதலை கண்டித்து கூறினார்.
AFP பத்திரிகையாளர்கள் தலைநகர் முழுவதும் ஒரே இரவில் வெடி சத்தங்களை கேட்டனர். மேலும் வெப்பநிலை மைனஸ் 20 செல்சியஸை நோக்கிக் குறைந்திருந்த சூழ்நிலையில் வெப்பம் துண்டிக்கப்பட்டதைக் கண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழித்தெழுந்தனர்.
ரஷ்யா 71 ஏவுகணைகள் மற்றும் 450 தாக்குதல் டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைன் 38 ஏவுகணைகளையும் 412 டிரோன்களையும் இடைமறித்து அழித்ததாக கூறியுள்ளது. இந்த தாக்குதல்களில் தலைநகரில் 5 பேர் காயமடைந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






