search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அனைத்துக்கட்சி அரசில் இணையுமாறு இலங்கை எதிர்க்கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
    X

    அனைத்துக்கட்சி அரசில் இணையுமாறு இலங்கை எதிர்க்கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை

    • ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளது.
    • இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவுமில்லை என உலக வங்கி கூறியுள்ளது.

    கொழும்பு :

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் பதவியை ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சிகளும் இணைந்த வலுவான அரசு அமைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார். இதற்கு வசதியாக மந்திரிசபையையும் அவர் இன்னும் விரிவாக்கம் செய்யவில்லை.

    இலங்கையில் 30 மந்திரிகள் வரை நியமிக்க வாய்ப்பு உள்ள நிலையில், வெறும் 18 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் ஆளும் இலங்கை மக்கள் கட்சி அல்லாத பிற கட்சிகளில் இருந்து 2 பேர் மட்டுமே மந்திரிகளாக உள்ளனர்.

    எனவே தனது தலைமையிலான அரசில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கி விட்டார்.

    அந்தவகையில் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியுடன் நேற்று முன்தினம் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இவ்வாறு நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு அனைத்துக்கட்சி அரசு உருவாக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    ஆனால் ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசாவின் சமாகி ஜன பலவகேயா அறிவித்து உள்ளது. எனினும் அந்த கட்சி எம்.பி.க்கள் சிலர் தனித்தனியாக அரசை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மறுபுறம் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் டல்லஸ் அழகப்பெருமாவை ஆதரித்து இருந்தாலும், அரசில் இணைய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    இலங்கையில் அனைத்துக்கட்சி அரசு அமைப்பதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், இதற்காக குறுகிய காலம் மட்டுமே அரசு காத்திருக்கும் என்றும் சட்டத்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே கூறியுள்ளார்.

    இதன் மூலம் ஜனநாயகத்திற்குள் நம்பிக்கை உணர்வை மீண்டும் ஏற்படுத்தவும், இலங்கைக்குள் இருக்கும் சமூக-அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கவும் அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அதிபரின் கொடியை அவமதித்ததாக எதிர்க்கட்சி வர்த்தக யூனியனின் முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    அதிபர் மாளிகையில் அத்துமீறி நுழைந்ததுடன், அதிபரின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியதை அவர் வீடியோவில் வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக உலக வங்கியுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஆனால் தற்போதைய நிலையில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி கூறியுள்ளது.

    Next Story
    ×