என் மலர்
உலகம்

பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 11 பாகிஸ்தான் வீரர்கள் பலி
- பயங்கரவாதிகள் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல், மேஜர் உள்ளிட்டோர் உயிரிழப்பு.
- 19 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை சார்பில் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் 19 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேவேளையில் 11 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சண்டையில் 39 வயதான லெப்டினன்ட் கர்னல் ஜுனைத் தரிக் உயிரிழந்தார். இவர் படையை வழி நடத்திச் சென்றவர் ஆவார். அவருடன் 33 வயதான மேஜர் தய்யாப் ரஹத்தும் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீரர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகளின் அச்சமற்ற மகன்களின் தியாகம் ஒருபோம் வீண் போகாது என்றார். அத்துடன் பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் வெற்றிபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.






