என் மலர்
உலகம்

லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
- உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.
Live Updates
- 4 July 2022 5:34 AM IST
உக்ரைனின் எல்லையில் உள்ள ரஷியாவின் பெல்கொரோட் நகர் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 21 அடுக்குமாடி குடியிருப்புகள், 40 வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் பெல்கொரோட் நகரில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 4 July 2022 1:52 AM IST
உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க் மாகாணத்தின் முக்கிய நகரமான பிவோடலை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே கூறுகையில், லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷிய படைகள் இணைந்து நடத்திய போரில் பிவோடல் நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறியதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- 3 July 2022 3:49 PM IST
உக்ரைனின் முக்கிய நகரமான லிசிசான்ஸ்க் நகரை தமது படைகள் சுற்றி வளைத்துள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. லுஹான்ஸ்க் மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் படைகளை முற்றிலும் வெளியேற்றும் முயற்சியில் இது முக்கிய நடவடிக்கை ஆகும்.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் உக்ரைன் ராணுவத்தின் கடைசி கோட்டையாக இந்த நகரம் உள்ளது. இந்த நகரை சுற்றி உள்ள கிராமங்களை கைப்பற்றிவிட்டதாகவும், தற்போது நகருக்குள் உக்ரைன் படைகளுடன் சண்டை நடைபெற்று வருவதாகவும் ரஷிய ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.
- 3 July 2022 2:29 PM IST
கிழக்கு பிராந்தியத்தில் ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய கிழக்கு மாகாணமான லுஹான்ஸ்கில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி கோட்டையான லிசிசான்ஸ்கில் நடக்கும் சண்டையானது, அந்த நகரம் ரஷிய படைகளிடம் வீழ்ச்சி அடைய வழிவகுக்கலாம் என அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு லிசிசான்ஸ்க் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, அதேசமயம் துரதிர்ஷ்டவசமாக, அது இன்னும் உக்ரைனிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை என, லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷியாவுக்கான தூதர் கூறியிருக்கிறார்.
- 3 July 2022 2:13 PM IST
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷிய ராணுவ தளத்தை குறிவைத்து 30 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் இவான் பெடோரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதலால் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ரஷிய ரெயில் நேற்று மெலிடோபோல் அருகே தடம் புரண்டதாகவும் பெடோரோவ் கூறினார்.
- 3 July 2022 6:17 AM IST
உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் போரில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனின் ஏவுகணை தாக்குதலை பெலாரஸ் ராணுவம் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் இடைமறித்து அழித்தது என அதிபர் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
- 3 July 2022 2:09 AM IST
ரஷியா நடத்திவரும் போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1 பில்லியன் யூரோ அளிக்கப்படும் என ஜெர்மனி கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், ஜெர்மனி அளித்த வாக்குறுதியின்படி 1 பில்லியன் யூரோ மானியத்தைப் பெற்றோம் என உக்ரைனின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிதியானது சமூக மற்றும் மனிதாபிமான செலவினங்களுக்கு நிதியளிக்க ராணுவச் சட்டத்தின்படி முன்னுரிமை அளிக்கப்படும் என உக்ரைன் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 2 July 2022 6:04 PM IST
உக்ரைனில் ரஷிய படைகள் பொதுமக்களை குறிவைப்பதாக கூறும் குற்றச்சாட்டை ரஷிய அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளார். ரஷிய ஆயுதப்படைகள், பொதுமக்களை குறிவைத்து வேலை செய்யாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- 2 July 2022 5:35 PM IST
மைகோலெய்வில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நகரத்தை உலுக்கியதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு மேயர் அறிவுறுத்தி உள்ளார்.
- 2 July 2022 5:35 PM IST
உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், பிரிட்டனைச் சேர்ந்த 2 நபர்கள் ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, கூலிப்படையினர் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ரஷிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






