என் மலர்tooltip icon

    உலகம்

    லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
    X

    லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
    • ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.


    Live Updates

    • 6 July 2022 10:34 PM IST

      டோனெட்ஸ்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • 6 July 2022 3:18 PM IST

      அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து தானியங்கள் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டுவதை விசாரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்யக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்களை விசாரிக்க உதவுமாறு துருக்கியிடம் உக்ரைன் கேட்டுள்ளது.

    • 6 July 2022 3:11 PM IST

      உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் மோதல் காரணமாக, உக்ரைனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு உலக உணவுப் பொருட்களின் விலை சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும். ஆனால் அதன் தெற்கு கடற்கரையில் போர் மூளும் மற்றும் அதன் பல துறைமுகங்கள் தடுக்கப்பட்ட நிலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய போராடி வருகிறது.

    • 6 July 2022 5:30 AM IST

      டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், உக்ரைன் விவகாரத்தில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் சிக்கலான விவகாரம். உக்ரைன் போரில் இருந்து எரிபொருள், உணவு, உர தட்டுப்பாடு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது என்றார்.

    • 6 July 2022 2:33 AM IST

      ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தனது ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் ஜப்பான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரஷியா மற்றும் அதன் வலிமையான கூட்டாளியான பெலாரஸ் மீது ஜப்பான் புதிய தடைகளை விதித்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து தங்க இறக்குமதியை நிறுத்துவதாகவும், இரு நாடுகளின் ஆலோசனை மற்றும் கணக்கியல் சேவைகளை நிறுத்துவதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

    • 5 July 2022 1:46 PM IST

      துறைமுகங்கள் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வுடன் தனது நாடு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கியேவில் நேற்று வருகை தந்த ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுடன், இந்த திட்டத்தை செயல்படுத்துவது சில இடங்களில் கடினமாக இருக்கும், ஆனால் நிச்சயமாக சாத்தியம் என்று ஜெலென்ஸ்கி கூறினார். ஏனெனில் உக்ரைன், தானிய ஏற்றுமதி செய்யும் நாடாகவும், அடுத்த ஆண்டு விதைப்பதற்கு ஏற்றுமதி தேவைப்படும் என்பதால் விவசாயிகளும் இதில் ஆர்வமாக உள்ளனர் என்று உக்ரேயின்ஸ்கா பிராவ்தா தெரிவித்துள்ளது.

    • 5 July 2022 1:40 PM IST

      சுரங்க நிறுவனமான நோர்னிக்கலின் மிகப்பெரிய பங்குதாரரான ரஷ்ய தொழிலதிபர் விளாடிமிர் பொட்டானின் இன்று, அலுமினிய உற்பத்தியாளர் ருசலுடன் நார்னிக்கலை இணைப்பது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த திட்டம் ருசல் நிர்வாகத்திடம் இருந்து வந்ததாக, பொட்டானின் ஆர்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

    • 5 July 2022 6:11 AM IST

      போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுவதாக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளன. இந்த ஆண்டிற்கான உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனை புனரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாடுகள் இந்நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • 5 July 2022 4:02 AM IST

      உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவின் அடக்குமுறை செயலுக்கு எதிராக பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும், தங்கள் நாடுகளில் உள்ள ரஷிய செல்வந்தர்களின் சொத்துக்களையும் முடக்கின.

      இந்நிலையில், முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷிய செல்வந்தர்களின் சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பான வாய்ப்புகளை இங்கிலாந்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ரஷிய செல்வந்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 4 July 2022 12:51 PM IST

      உக்ரைனின் லுகான்ஸ்க் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷியா கூறியுள்ளது. கிழக்கு உக்ரைனில், உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசான்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா நேற்று அறிவித்ததையடுத்து, மாகாணம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக கூறியது. இதையடுத்து உக்ரைன் ராணுவம் லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியது.

      அதேசமயம் மீண்டும் லிசிசான்ஸ்க் நகருக்கு திரும்புவோம் என்றும், இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபட கூறியிருக்கிறார்.

    Next Story
    ×