அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி

ஜிம் ஜோர்டான் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டான் சந்தித்து பேசினார்.
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற சபாநாயகராக இருந்த குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்திக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

ஆளுங்கட்சியுடன் இணைக்கமாக இருப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை குடியரசு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதில் குடியரசு கட்சி சார்பில் ஜிம் ஜோர்டன் களம் இறங்கினார். ஆனால் அவருக்கும் சொந்த கட்சி உறுப்பினர்களிடம் எதிர்ப்பு இருந்தது.

இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று ஓட்டெடுப்பு நடந்தது. சபாநாயகர் பதவியை பெற 217 வாக்குகள் பெற வேண்டும்.

இதில் ஜிம் ஜோர்டன் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.

ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹக்கீம் ஜெப்ரிஸ் 212 வாக்குகளை பெற்றார். ஆனால் அக்கட்சி பிரதிநிதிகள் சபையில் சிறுபான்மை கட்சியாகும். எனவே அந்த வாக்குகள் போதுமானதாக இல்லை. இதனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

ஜிம் ஜோர்டன் தனக்கு 221 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தார். 4 வாக்குகள் மட்டுமே இழக்கலாம் என்று கருதினார். ஆனால் அவருக்கு எதிராக 20 வாக்குகள் விழுந்துள்ளது.

தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டன் சந்தித்து பேசினார். ஆனாலும் ஜிம் ஜோர்டனுக்கு எதிரான நிலைப்பாட்டில் சில உறுப்பினர்கள் தீவிரமாகவே உள்ளனர். அவருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கவில்லை. இதையொட்டி அடுத்த சபாநாயகர் வேட்பாளராக டாம் எம்மர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது சுற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com