search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    முன்னாள் பிரதமர் இம்ரான்கான்
    X
    முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

    சலுகை விலையில் கச்சா எண்ணெய் - இந்தியாவை மீண்டும் புகழ்ந்த இம்ரான்கான்

    மக்களின் நலனுக்காக அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்தார்.
    இஸ்லாமாபாத்:

    உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரஷியாவிடம் பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இந்தியாவும் மலிவு விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

    அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7-ம் குறைத்து இந்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து இம்ரான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தபோதும் தனது நாட்டு மக்களின் நலனுக்காக அமெரிக்காவின் அழுத்தையும் மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதைத்தான் தன்னிச்சையான வெளியுறவுக்கொள்கை மூலம் எனது தலைமையிலான பாகிஸ்தான் அரசும் செயல்படுத்த முயற்சிக்கிறது என பதிவிட்டுள்ளார். 

    Next Story
    ×