search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் இந்திய வீரர் (கோப்பு படம்)
    X
    எல்லையில் இந்திய வீரர் (கோப்பு படம்)

    எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர் - சீனா குற்றச்சாட்டு - அதிகரிக்கும் பதற்றம்

    எல்லையை தாண்டி வந்து எங்கள் வீரர்களை எச்சரிக்கும் விதமாக இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
    பீஜிங்:

    லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.

    போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் பெருமளவு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

    இதற்கிடையில், அருணாசலபிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

    இதற்கிடையில், இந்தியா-சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியும் ஒன்று. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள இந்த ஏரிப்பகுதியில் இந்திய-சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில், பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி நுழைந்து சீன படையினரை எச்சரிக்கும் விதமாக இந்திய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீன செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,’ இந்திய ராணுவத்தினர் அத்துமீறி எல்லைக்கட்டுப்பட்டு கோட்டை கடந்து பாங்காங் ஏரியின் தெற்கு கரை மற்றும் ஷென்பவோ மலையோரப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சீன வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். 

    ஆனால், சீன வீரர்களை எச்சரிக்கும் விதமாக இந்திய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நிலைமையை கட்டுப்படுத்த இந்திய படையினரின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் சீனா வீரர்களு பதில் தாக்குதல் நடத்தினர். 

    இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான நிகழ்வாகும். அபாயகரமான நடவடிக்கைகள் எடுப்பதை இந்திய தரப்பு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரித்துக்கொள்கிறோம்’ என்றார்.

    இந்திய வீரர்களின் எச்சரிக்கை துப்பாக்கிச்சூட்டிற்கு சீன வீரர்கள் பதில் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளது.

    இந்திய வீரர்களும், சீன வீரர்களும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா தெரிவித்துள்ள சம்பவம் எல்லையில் உச்சபட்ச பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

      

    Next Story
    ×