search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு
    X

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. #BrexitDeal #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.

    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக் ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் நடந்து வரும் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தெரசா மே, மாநாட்டுக்கு மத்தியில், ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பிரெக்ஸிட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க டொனால்டு டஸ்க் ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்து இந்த 2 வாய்ப்புகளையும் தவறவிடும் பட்சத்தில் மே மாதம் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் அந்நாடு பங்கேற்க வேண்டிய கட்டாயமான சூழல் உருவாகும்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஓட்டெடுப்பு வெற்றிகரமாக நடந்து முடியாத பட்சத்தில் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிப்பது என்பது தாமாகவே சாத்தியமற்றது ஆகும்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள மற்ற 27 நாடுகளும் ஒருமனதாக இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்” என கூறினார்.

    இதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு முன்வைத்த 2 வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரசா மே அறிவித்தார். இது குறித்து அவர், “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்த 3 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போடுங்கள் என கூறுவது தவறானது என உறுதியாக நம்புகிறேன்” என் றார்.

    இதன் மூலம் தெரசா மே, அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்துவார் என தெரிகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×